சனி, 11 ஜூலை, 2009

வன்முறையின்றி தேர்தல் ஏதுக்கடி குதம்பாய்!

- சதாசிவம். ஜீ.
‘ஆடு நனையுதென்று ஓணான் அழுதுதாம்’ என்ற கதையாக வவுனியாவில் தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் மக்களைப் பார்த்து பொறுக்க முடியாமல் பலரும் பலவிதமாக கண்ணீர் வடிக்கின்றனர். இதில் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வடித்த கண்ணீரை நாம் ஓணான் அழுததோடு ஒப்பிடமுடியாவிட்டாலும், ஓணான்களுடன் அவருக்கு நல்ல உறவிருக்கிறது. அந்த உறவால்தான் அவருக்கு பாராளுமன்ற கதிரை கிடைத்தது என்பதை யாழ் மக்கள் நன்கு அறிவர். அதுவும் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர்! முதலாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் குதிரை கஜேந்திரன்! இவர்களுக்கும் சனங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பது தெரியாவிட்டாலும், இவர்களிருவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை யாழ். மக்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கின்றனர். பாவம் சிதம்பரநாதன் ‘அப்ப (90களில் யாழ்ப்பாணத்தை புலிகள், தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லை. மற்றும் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது) புலிகளுக்காக விளக்குப் பிடித்து நாடகம் போட்ட பாவமோ என்னவோ!’வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் சொற்களில் வடித்துவிடக்கூடியதல்ல. காலைக் கடனை செலுத்துவதற்கு(கழிப்பதற்கு) நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அதனாலேயே வயிற்று வலி மற்றும் வியாதிகள் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. இவர்களின் நிலைமைகள் தொடர்பாக பலரும் தமது பார்வையை முன்வைத்திருக்கிறார்கள்.அடைமழை. சாவீடு. காவோலை கொண்டோடுறவனை வழிமறித்து ஐயர் குருதட்சனை கேட்ட கொடுமைகள் அங்கே நடந்தவண்ணமே இருக்கின்றன. அந்த மக்களுக்கென வழங்கப்படுபவை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் சுவறிச் செல்லம் துர்பாக்கியம். சத்தம் சந்தடியில்லாமல் சில நல்லவையும் நடந்துவருகின்றன. புலன் பெயர்ந்துள்ள புலமையுள்ளவர்கள் சிலர் நாடு திரும்பி, தடுப்பு முகாம்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகிறார்கள். இதில் குறிப்பிட்டக்கூடியது காயப்பட்டவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
மாநகரசபைத் தேர்தல்.
தேர்தல் இன்றி வன்முறை நடைபெறும். ஆனால் வன்முறையின்றி தேர்தல் நடைபெறுமா? இல்லை. தேர்தல் என்றால் வன்முறையும் சேர்ந்ததுதான் என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்டுவருகிறது. இது இலங்கைக்கோ இந்தியாவுக்கோ மட்டும் பொருத்தமானதல்ல.யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் மங்களகரமாக தேர்தல் வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. வன்முறையால் அடாவடித்தனங்களால் எதையும் சாதிக்கலாம் என்றிருந்தவர் முள்ளிவாய்க்காலில் தலை கிள்ளி எறியப்பட்ட பாடத்தை இன்றும் கற்றுக்கொள்ள மறுப்பது அறிவீனம். வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுவித்துக்கொண்டு ஜனநாயக ரீதியில் மக்களை அணுகுவதுதான் அவர்களுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.ஊரில் சில்லறைத்தனமான திருட்டுக்கள் நடைபெற்றால் ‘இன்னார்தான் எடுத்தது’ என்பதை சனங்கள் நன்கு அறிவர். இவ்வளவு காலமும் புலிகளின் தலையில் பச்சடி அரைக்கலாம் என்று பலதரப்பட்டவர்களும் தடியைக் கையிலெடுத்து தண்டல்காரன் ஆனார்கள். இப்போ புலிகளின் கொட்டம் (i) இல்லை. எனவே சனங்களுக்கு விடையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஸ்டமனதல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வது நல்லது. யூ.என்.பியின் ஆட்சிக்காலத்தில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அதளை மீள்நிர்மாணம் செய்வதற்கு சகலவழிகளிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ‘வீட்டுக்கொரு செங்கல்’ என்ற திட்டத்தில் செங்கற்களை கிராமம் கிராமமாக சேகரித்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தது. தென்பகுதி மக்களின் பங்களிப்பு அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.முன்னாள் மேயர் செல்லன் கந்தையாவின் தலைமையில் நூலகம் திறக்கப்பட சகல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நூலகம் திறக்கப்படவில்லை. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அனைவரும் திறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டியபோது, செல்லன் கந்தையா மற்றும் தங்க. முகுந்தனை மூடிய அறைக்குள் அழைத்த அன்றைய புலிகளின் யாழ். மாவட்டப்பொறுப்பாளர் இளம்பருதி (பாப்பா, ஆஞ்சநேயர்) யாழ்ப்பாணத்தில் ‘ரத்த ஆறு ஓடும்’ என்று எச்சரித்து திறக்கவிடாமல் செய்தார். (இன்று இளம்பருதி இராணுவத்தின் கவனப்பில் நலமாகவேயுள்ளார்!)இந்த செய்தியினை அன்றைய யாழ். பத்திரிகைகள் உட்பட அனைத்து தமிழ் பத்திரிகைகளும் இருட்டடிப்பு செய்தன. தமிழ் பத்திரிகைகள் புலிகளுக்கு பயந்துதான் அவ்வாறு நடந்துகொண்டன என்பதெல்லாம் சுத்த பம்மாத்து. ஏனெனில் புலிகளின் விருப்பு எது? என அறிந்து அதன்படி நடந்துகொள்வதை பயந்துதான் என்று சொல்லுவது அறியாமை. செல்லன் கந்தையாவின் தலைமையில் அது திறக்கப்படக்கூடாது என்பதில் யாழ் சைவ வேளாளர் குடி மட்டும்தான் மிகுந்த கவனம் செலுத்தியது என்றில்லை. மேற்படி பத்திரிகைகளும்தான்.கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக ஏறக்குறைய நாற்பதாயிரம் உயிர்களை பலிகொடுத்தும் புலிகளால் குறைந்தபட்சம் ஒரு நூகத்தைகூட திறக்க முடியவில்லை. பேரூந்து நிழல் குடையினைக்கூட திறக்க முடியாத வக்கற்றிருந்தார்கள். புலி உறுப்பினர்களின் பெயர்களில் இருக்கும் நிழல் குடைகள் புலி உறுப்பினர்களின் உறவுகளால் நிர்மாணிக்கப்பட்டது. புலிகளுடனான இறுதி சமாதானக் காலத்தில்தான் மேற்படி அடாவடித்தனங்கள் அரங்கேறின. நூலகம் திறப்பதில் முன்னின்று உழைத்த யாழ். மாநகர உறுப்பினர் தோழர் சுபத்திரன் (றோபேட்) இதே சமாதான காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலிகளுக்கு நல்லவையும் பிடிக்காது, நல்லவர்களையும் பிடிக்காது. இவர்கள் மக்களுக்கு நல்லவை நடக்காதபடி பார்த்துக்கொண்டார்கள். நல்லவர்களை உயிரோடு விட்டுவிடாமலும் பார்த்துக்கொண்டார்கள்.இந்த மனிகுலத்துக்குப் புறம்பான கேவலம்கெட்ட நடைமுறைகள் புலிகளுடன் விட்டொழியட்டும். மனிதகுல வரலாற்றில் நாமும் மூத்தகுடி என்று மார்பு தட்டுவதற்கான தகுதிகளை இனியாவது நாம் வளர்த்துக்கொள்வோம். மக்களை ஜனநாயக ரீதியில் சிந்திக்கவும் செயற்படவும் அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள் அனுமதிப்பது மட்டுமல்ல தூண்டவும் வேண்டும். உண்மையில் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களை அறிவியல், கலாசார ரீதியில் முன்னேற்றவும், அவர்களை பாதுகாக்கவும்தான். அவர்களை அடக்கி ஆழ்வதற்காக அல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது சுகபோகத்தை மேம்படுத்துவதோ அல்லது கட்சியை - இயக்கத்தை வளப்படுத்துவதற்காகவோ அல்ல.

ஸ்ரீகாந்தா சொல்வதை நம்பலாமா?

அண்மையில் ஸ்ரீகாந்தா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மக்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன்சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டுடன் வேலை செய்யவேண்டும் என்றும். அதுதான் இப்போது செய்யக்கூடிய ஒரே வளியென்றும் கூறியிருந்தார். இது தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சொல்லப்பட்டுள்ளதா அல்லது உண்மையிலேயே மக்களுக்காக சில தந்திரோபாயங்களை பாவித்து மக்களை மீளக் குடியேற்றலில் உதவப்போகின்றாரா? இவர் கூறியதை நம்பலாமா?

வியாழன், 19 மார்ச், 2009

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :

மன்னார் வைத்திய சாலையில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் :
மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் இருவர் காணாமல் போயிருப்பதால் வைத்தியசாலையின் பாதுகாப்புக்கள் மேலும் பலப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. மன்னார் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டுமாத ஆண் குழந்தையும் நேற்று இரவு (18.03.2009) முதல் காணாமல் போயிருக்கின்றனர். வன்னிப்பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலமாக திருகோணமலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு பின் அங்கிருந்து இம்மாதம் 16ஆம் திகதி மன்னார் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்களில் நகுலேஸ்வரன் கிருசாந்தினி மற்றும் நகுலேஸ்வரன் சஞ்ஜீவன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார்கள். மேற்படி இருவர் காணாமல் போயிருக்கும் நிலையில் இன்று இராணுவ உயர் அதிகாரிகள் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையின் சுற்றுப்புற மதில்கள் முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது. இது இவ்வாறிருக்க கடந்த மாத இறுதிப்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலை விடுதியில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் காவற்துறையினரினால் வைத்தியசாலைச் சூழலில் பாதுகாப்புக்கள் கருதி விசேட நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சிறுமி கொலையில் சந்தேக நபர் ரீ எம் வீ பியைச் சேர்ந்தவர் - போலீஸ்


திருகோணமலை சிறுமி கொலையில் சந்தேக நபர் ரீ எம் வீ பியைச் சேர்ந்தவர் - போலீஸ்
பி.பி.சி செய்தி
திருகோணமலை சென் மேரிஸ் பெண்கள் கல்லூரியிலிருந்து கடந்த 11ம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட நிலையில் 13ம் திகதி வெள்ளியன்று நகரின் மையப்பகுதியில் உள்ள வடிகான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதச் சிறுமியான ஜூட் றெஜி வர்சா கொலைச் சம்பவம் தொடர்பாக கைதான நபர்களில் ஒருவரான ஜனார்த்தனன் ரீ எம் வீ பீ யின் உள்ளுர் தலைவர்களில் ஒருவர் என திருகோணமலை பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒஸ்வின் மேர்வின் றினவன்ஸன் மற்றொரு சந்தேக நபரான கரன் ஆகியோரும் ரீ எம் வீ பீ உறுப்பனாகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஒரு சந்தேக நபர் றெஜினொல்ட் என்பவர் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. பிரதான சந்தேக நபரான றினவுன்ஸன் கடந்த 15ம் திகதி ஞாயிறன்று பொலிசாரால் விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்ட வேளை தப்பியோட முனைந்தபோது போலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். உள்ளுர் தலைவரான ஜனாhத்தனன் ரீ எம் வீ பீ யின் உவர்மலை பிரிவு பொறுப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ரீ எம் வீ பீயின் தலைவர் கைலேஸ்வரராஜா சந்தேக நபாகள் ரீ எம் வீ பீ யின் உறுப்பினர்கள் அல்ல என மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.இதே வேளை இந்த சிறுமியின் கொடுர கொலைச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நகரின் சில இடங்களில் இன்று கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
_____________________________________________________________________________

வியாழன், 12 மார்ச், 2009

புதுமாத்தளனில் தற்காலிகக் குடில்கள் புயல் காற்றால் பெரும் சேதம்


புதுமாத்தளனில் தற்காலிகக் குடில்கள் புயல் காற்றால் பெரும் சேதம் : இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு என டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு
முல்லைத்தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50இ000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 9இ 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவர்கள் போதிய உணவுஇ மருந்துஇ சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50இ000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன்இ தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தமது அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.

புதன், 11 மார்ச், 2009

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதல்மத வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது புலிகள் நடத்திய மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட இந்தச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தற்கொலைத் தாக்குதல் மூலம் இப்படியான செயல்பாட்டை இலங்கையில் புலிகளைத்தவிர இதுவரை வேறு எவரும் செய்தது கிடையாது. எனவே இது புலிகளால் செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகும். சிலர் வாதிடுவதுபோல் அரசாங்கம் செய்து விட்டு புலிகள் மேல் குற்றம் சுமத்தலாம் என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை. புலிகள் அநாகரிகமான செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இதே வேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக்கொண்டும் காயப்படுத்தப் பட்டுக்கொண்டும் இருக்கின்றார்கள். அரசாங்கம் அதை மறுத்துக்கொண்டிருக்கிறது. அந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் தேவையான கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். புலிகள் மக்களோடு நிற்கின்றார்கள், அங்கு நின்று தர்க்குகின்றார்கள் அதனால்தான் அரசாங்கம் அப்படிச் செய்கின்றது என்ற சிலரின் வாதத்தை எவராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது அது மனிதாபிமானம் கொண்ட செயலும் அல்ல. அரசு உடனடியாக இந்தக்காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கப்பல் திரும்பியது ஏன்? புதிய தகவல் செய்தியை தொடர்ந்து உள்ளது.

உணவுக்கப்பல் தாக்குதலுக்குள்ளாகவில்லை ‐ திருகோணமலையை நோக்கி சென்றுள்ளது – முல்லை அரச அதிபர் :

நான் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை. அந்த உணவுக் கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம் என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறித்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
500 மெற்றிக் தொன் உணவுடன் வந்த கப்பல் அதிலிருந்து 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இறக்கிவிட்டு மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு மேலும் இரண்டு நாட்கள் தேவைப்பட்ட நிலையில் கடும் காற்றுஇ மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உணவுப் பொருட்களை இறக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக தாங்கள் அறிவதாகவும் அங்கிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் அப்படித்தான் கூறினர் என்று அவர் தெரிவித்தார்.
அதேபோல் அங்கு வருகின்ற உணவுப் பொருட்களை தாங்கள்தான் பொதுமக்களுக்குப் பிரித்து வழங்குவதாகவும் வழங்குகின்ற பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலே உள்ள செய்திபற்றி அங்குள்ள சிலருடன் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கப்பல் தரித்து நின்ற இடத்திற்கு அண்மையாக சண்டை நடைபெற்றதும் குண்டுகள் விழுவதும் உண்மையெனவும். ஆனால் கப்பலை நோக்கி குண்டு வீசப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடல் கொந்தளிப்பாக இருந்ததும், பொருட்களை இறக்குவதில் சிரமம் இருந்ததும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. அப்படியாக இருந்தால் ஏன் அரசாங்கம் பொய்யான காரணம் கூறியது என்பது கேள்வியாக உள்ளது. இப்படியான பிரச்சாரம் அரசாங்கத்தின் மேல் மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு குந்தகமானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியாழன், 5 மார்ச், 2009

உண்மைகளை புரிய வையுங்கள் அது போதும்

-அ.விஜயகுமார்-
காட்டுக்குள் கண்ட, கடிய மிருகங்களையெல்லாம் அடித்து புசித்துக் கொண்டிருந்த சிங்க மகாராஜாவுக்கு ஓரு நாள் காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய சந்தேகம் வந்து விட்டது. தான் இந்த காட்டுக்கு ராஜாவா? இல்லையா? பெரிய யோசனையுடனும் அகங்காரத்துடனும் ஒரு வெறியுடனும் முழுக்காட்டையும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு உடனே புறப்பட்டுள்ளார். வழியில் குட்டி முயல் ஒன்று போய்க் கொண்டிருந்திருக்கின்றது. டேய் முயலே இங்கே வாடா என சிங்கமகா ராஜா அழைக்க முயல் கூனிக்குறுகி சிங்கத்தின் முன் வந்து நின்றுள்ளது. டேய் குட்டிப் பயலே “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”என இவர் உறும “மகாராஜா நீங்கள்தான் இந்தக் காட்டுக்கு ராஜா அதில் என்ன சந்தேகம்” எனக்கேட்டு முயல் கூனிக்குறுகி நின்றுள்ளது. சிங்கமகா ராஜாவுக்கு ஓரளவு திருப்தி. சரி. ஓடுடா என முயலை விரட்டிவிட்டு அப்படியே மறுபக்கம் போக அங்கு ஒரு நரி போய்க்கொண்டிருந்திருக்கின்றது. டேய் நரிப்பயலே இங்கே வாடா என அழைத்து “யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”எனக்கேட்க “நீங்கள்தான் மகா ராஜா.அதில் இரண்டாம் கருத்துக்கே இடம் இல்லை”எனக் கூறியுள்ளது. சரி.ஓடுடா என நரியை விரட்டிவிட்டு அப்படியே மான், கரடி, பன்றி எனக்கேட்டு தான் தான் தலைவன் என்ற தோறணையில் இறுமாப்பில் காட்டையே கலக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்திருக்கின்றார்.வழியில் யானையொன்று நின்று கொண்டிருந்திருக்கிருன்றது.அந்த யானையும் ஏதோ ஒரு கவலையில் பெரிய யோசனையில் இருந்திருக்கின்றது.
சிங்கமகாராஜா! வந்த வேகத்தில் யானையை ஒரு அதட்டு அதட்டி “ஏய் யானைப்பயலே யாருடா இந்தக் காட்டுக்கு ராஜா”எனக் கேட்டுள்ளார். ரொம்ப யோசனையிலும் வேறு ஒரு பேர்சனல் கவலையிலுமிருந்த யானை அப்படியே திரும்பி தும்பிக்கையை சிங்கமகா ராஜாவின் வயிற்றுப் பக்கத்தால் நுழைத்து முதுகுப்பக்கத்தால் சுழட்டி ஒரு வீசு வீசியதாம். தலைகுப்புற ரொம்ப தொலைவில் போய் விழுந்த நம்ம சிங்க மகா ராஜா. முன்னங்கால்களால் பின்புறம் ஒட்டிய மண்ணைத்தட்டி விட்டுக் கொண்டு “யார் மகாராஜா என்ற விடயம் உமக்குத் தெரியாவிட்டால் தெரியாது எனச் சொல்ல வேண்டியதுதானே! அதற்குப் போய் இந்த வீச்சு வீச வேண்டுமா”எனக் கேட்டாராம்.
கடந்த ஆறுமாதகாலமாக எல்லா மீடியாக்களும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதாவது புலி முடிந்து விட்டது. இனி அடுத்ததுஎன்ன? அடுத்து வரப்போகும் அமைப்பு எப்படி இருக்கும்? யார் வரப் போகின்றார்கள்? எப்படி எமது உரிமைகளைப் பெறுவது! பெறுவதற்கு முன் வன்னி மக்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? அவர்கள் முழுமையாக வெளியேறுவார்களா! வெளியேற விடுவார்களா? வெளியேறி வந்தாலும் சிங்கள அரசு உரிய பரிவு காட்டுமா? புலிக்கு பகிரங்கமன்னிப்பா? புலி தேவையா? புலி தனது பாணியை மாற்றுமா? புலி மாறினாலும் மற்றவர்கள் அவர்களை மாற விடுவார்களா ?
இங்கு புலிக்கெதிரான எல்லோரும் ஒரு விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் .புலி பூண்டோடு அழிக்கப்படவேண்டும். சரி வாஸ்தவம்தான். 1983 ஜூலையில் பலாலி ரோட் தின்னவேலியில் புலி செய்த எக்ஸ்புளோடர் விளையாட்டின் பின்னர்தான் ஜூலை கலவரம் வெடித்தது. ஒரு பிரளயம் வந்தது. அதன் பின்னர்தான் நிறையஉலக நாடுகளுக்கு எமது பிரச்சனை தெரிய வந்தது.
அதற்கு முன் நடந்த நீர்வேலி வங்கிக் கொள்ளை, சாவகச்சேரி பொலீஸ் தகர்ப்பு, துரையப்பா கொலை, பஸ்தியாம்பிள்ளை குறுப் முருங்கனில் உயிரிழந்தது, யாழ் தபால் நிலையம் கொள்ளை என எவ்வவளவோ செயல்பாடுகள் நடந்தாலும் புலி செய்த இந்தச் செயல்தான் எல்லோர் மனதிலும் நின்றது. பலரையும் அவ்வியக்கத்தின் பால் ஈர்த்தது என்றாலும் மிகையேதும் இல்லை.இந்தியாவில் கூட மற்ற இயக்கங்கள் எவ்வளவோ கருத்தரங்குகளையும் கவன ஈர்ப்புகளையும் அக்காலங்களில் தெருத்தெருவாக செய்தாலும் அனைத்து செயல்பாடுகளும் புலிகளுக்கு இலாபம் தருபவையாகவே இருந்தன.அவர்களுக்கு ஈரோஸ், டெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற எந்த பேதமும் தெரியவில்லை. “நீங்க விடுதலைப் புலிங்களா சார்” எனத்தான் இந்திய மக்கள்அனைவரும் கேட்டனர். உதவிசெய்தனர். வை.கோ, கருணாநிதி, எம்.ஜீ.ஆர், மற்றும்கம்யுனிசகட்சிகள், இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே ஏழு இயக்கம் இருக்கும் சங்கதி தெரிந்திருந்தது. அந்த அளவுக்கு 1983 ஜூலை தாக்குதல் அதனால் விளைந்த அனர்த்தம் தமிழன் அகதிஆன விடயம் மொத்த இந்திய மக்களையும் உசுப்பியிருந்தது.
இதனால் 1984 இன் பின் மற்ற இயக்கங்களில் இணைந்தவர்களைவிட புலிகள் இயக்கத்தில் இயக்கத்தில் இணைந்தவர்கள்தான் அதிகம் எனலாம். இப்போது இணையத்தளங்களில் எழுதுபவர்கள், அதை படிப்பவர்கள், அதற்கு பின்னுட்டம் எழுதுபவர்கள் எல்லோரையும் தொகுத்துப் பார்த்தால் 1986க்கு முன் இயக்கங்களில் பல பொறுப்புகளில் இருந்தவர்கள்,பல களமுனைகளை கண்டவர்கள் என ஒரு குறிப்பிட்ட தொகையினரே புலிக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும்-எதிராகவும், வன்னி மக்களினதும், மொத்த தமிழனினதும் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றனர். மற்ற அனைவரும் புலிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களாகவே உள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ புலி மேல் இருந்த மாயை அவர்களை அவர்களின்பால் தள்ளியது.
இப்போது “இரண்டும் கெட்டானாக” வன்னியில் சிக்கியுள்ள அந்த மக்களும் அவர்களை கேடயமாக வைத்துள்ளதாக சொல்லப்படும் மொத்த புலிகளும் தீண்டத்தகாதவர்களா என்பதுதான் மொத்த மக்களினதும் இன்றைய பிரச்சனை. இப்பிரச்சனை இரண்டொரு வாரத்தில்,அல்லது இரண்டொரு மாதத்தில் தீர்ந்து விடும் என வைத்துக் கொள்வோம். அதன் பின் புலியை, புலியில் விபரம் தெரியாமல் இணைந்தவர்களை, அவர்களை கண்மூடித் தனமாக ஆதரித்தவர்களை நாம் எந்தக் கண்ணாடியைக் கொண்டு பார்க்கப் போகின்றோம். மற்ற இயக்கங்கள் எல்லாம் லெனினிஷமும்,மாவோயிஷமும் சொல்லி மக்களை தமது இயக்கங்களுக்கு சேர்த்துக் கொண்டிருந்த போது தனி“டெரரிஷத்தை”மட்டும் சொல்லியே மக்களை தம்முடன் இணைத்துக் கொண்டவர்கள் புலிகள்.
1971 ஏப்ரலில் ஜே.வி.பி.நாடு பிடிக்க புறப்பட்டபோது அக்கலவரத்தை அடக்க முடியாமல் அப்போதைய பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் இந்திய அரசிடம் ராணுவ உதவி கேட்டார். இந்திய அரசு 2000 சீக்கிய இராணுவத்தை கப்பலில் கொண்டு வந்து ஹம்மாந்தோட்டையில் இறக்கியது. ஹம்மாந்தோட்டையில் இருந்து பொடிநடையாக புறப்பட்ட சீக்கிய இராணுவம் கதிர்காமம் மாணிக்க கங்கைவரை நடந்து வந்து கண்ணில் தென்பட்ட 35000 சிங்கள இளைஞர்களை வெட்டி வீசிவிட்டு சென்றார்கள். ஆம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு “கண்ணில் தென்படும் இளைஞர்களையெல்லாம் கொன்றுவிடுங்கள்”என்பதுதான்.
இவ்வாறு தலைமை சொல்லும் உத்தரவை கட்சிதமாக செய்யும் இளைஞர்களைத்தான் புலி வளர்த்து வைத்திருக்கின்றது. 1985, 1990களில் பிறந்த இந்த சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வெளி உலகு என்பதே கிஞ்சித்தும் தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தலைவர், தலைவர், தலைவர் மட்டுமே. இவ்வாறு தலைவரை நேசித்து, தலைவரை வணங்கியவர்களும், தலைவர் விபரம் புரியாத இளைஞர்களை வைத்து செய்த சில சாகஸங்களையும் தமது சாகஸங்களாக வரிந்து கட்டிக் கொண்டவர்களுமே இன்றும், இன்னும் கண்மூடித்தனமாக விடுதலைப் புலிகளை நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
என்னுடன் ஒரு பக்டரியில் 150 இலங்கையர் வேலை செய்கின்றோம். அங்கே வேலை செய்யும் பலர் புலி ஆதரவாளர்கள். வேலை செய்யும் 10மணிநேரத்தில் இரண்டுமணிநேரம் ஊருக்கு போன் செய்வதும், எத்தனை ஆமி செத்தான் என அடுத்தவனுக்கு வீறாப்புடன் கதை சொல்வதிலுமே காலத்தை கழிப்பர். சில நேரம் நேரடியாகவே பிரபாகரனுடனும், பொட்டம்மானுடனும் ரொம்ப சத்தமாக எம் கண்ணெதிரே கதைப்பார்கள். தலைவர் இப்பதான் கதைத்தார். சரியாம், எல்லாம் சரியாம். ரெண்டு ஆயுத கப்பல் இறங்கிட்டுதாம், உது மன்னார், தள்ளாடி எல்லாம் முக்கிய மில்லையாம் கிளிநொச்சிதான் முக்கியமாம். பொட்டண்ணரும் இப்பதான் பேசினார். அப்புறம் கிளிநொச்சி விழுந்த நாள் தொடக்கம் ஆறு நாட்கள் இவர்கள் வேலைக்கு வரவே இல்லை.
கடந்த சில நாட்களாக வேலைக்கு வருகின்றார்கள். யாருடனும் பேசுவதில்லை. டெலிபோனும் கொண்டுவருவதில்லை. தாமுண்டு தமது வேலையுண்டு என வருகின்றார்கள். போகின்றார்கள். இவர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. இவர்கள் வளர்ந்த பாசறை அப்படிப்பட்டது. பாhக்;கவே பாவமாக உள்ளது. நல்ல இளைஞர்கள்.அ வசரத்துக்கு ஏதும் கடன்கேட்டால் கூட அள்ளித்தருவார்கள்.”அண்ணன் உங்களுக்கு காசு கிடைக்கும் போது தாங்கண்ண” என்பார்கள். இவர்களை அள்ளி அணைக்க, ஆறுதல் சொல்ல, உண்மைகளைப் புரிய வைக்க ஏதாவது சிறு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதா? பனையால விழுந்தவன மாடு மிதித்த கதையாகத்தான் இருக்கின்றது.உசுப்பேத்தாதேயும், விசரேத்தாதேயும், டென்சனேத்தாதேயும் என திட்டித் தீர்க்கின்றோமே தவிர தவித்த முயலுக்கு தண்ணிகாட்டுபவர்கள் யாரையுமே காணோம்.
சிறிலங்காவில் இந்திய ராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்திருந்த காலமது. 40 பேரடங்கிய இராணுவ பட்டாலியன் ஒன்று மூதுர் என்கின்ற முஸ்லீம் கிராமத்தில் கொண்டு இறக்கப்பட்டி ருக்கின்றார்கள். இரவு எட்டு மணிபோல் இந்த பட்டாலியன் நகர்வலம் வந்துள்ளார்கள். அப்போது பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றிருந்த இரண்டுமுஸ்லீம் இளைஞர்கள் வீதியில் தொப்பியுடன் வந்து கொண்டிருந்திருக்கின்றார்கள். இவர்கள் அவ்விரு இளைஞர்களையும் சுற்றி வளைத்து பெயர் என்ன எனக் கேட்டுள்ளனர். ஒருவர் முஜிபுர் ரகுமான், மற்றவர் முகம்மது நிசாம் என பதில் அளித்துள்ளனர். பாகிஸ்தானி, பாகிஸ்தானி என குய்யோ முறையோ எனக்கத்தி அவர்களை அடித்து, நொறுக்கி அவர்களை கொல்ல முயற்சி செய்துள்ளார்கள். எதற்கும் இருக்கட்டுமே என “கேணல் நஞ்சப்பா”வுக்கு வோக்கி டோக்கியில் தகவல் தெரிவித்துள்ளார்கள். அப்பையன்களின் நல்ல நேரம் அப்போது கேணல் நஞ்சப்பா அடுத்த கிராமத்தில்தான் இருந்துள்ளார்.அந்த மனுஷன் தலைதெறிக்க ஓடி வந்து “டேய் மக்காள் இது பாகிஸ்தான் போடரல்லடா. நாம் இப்போது சிறிலங்காவில்” நிற்கின்றோம் என்ற விடயத்தை சொல்லியுள்ளார்.
இதில் விடயம் என்ன வென்றால் காஸ்மீர் போடரில் எல்லைக்காவல் படையில் இருந்த வீரர்களை இரவோடிரவாக கூட்டி வந்து சிறிலங்காவில் இறக்கி விட்டுள்ளனர். தாங்கள் எங்கு நிற்கின்றோம் என்பதே அந்த இராணுவ சிப்பாய்களுக்கு தெரியவில்லை. உலகின் தலைசிறந்த ராணுவம் என்கின்ற இந்தியாவே இப்படியென்றால் எதுவுமே தெரியாமல் புரியாமல் வளர்க்கப்பட்ட அந்த புலி இளைஞர்களின் நிலை எப்படி இருக்கும். இவர்களைக்கொன்று ரத்தத்தை குடித்து, நார் நாராக உரித்து, சனியனே உனது சகவாசமே வேண்டாம் என்பதால் நாம் எல்லோரும் சாப விமோசனம் அடைந்து விடுவோமா !
எவ்வளவுதான் நாம் புலி எதிர்ப்பு பேசினாலும், புலியை எதிர்த்தாலும் அவர்களுடனேயேதான் வாழ்கின்றோம். திருமண வீடு, பூப்புனித வீடு, பிறந்த நாள் வீடு, நியூ இயர், விசா கிடைத்தால் பாட்டி, புது மனைவி விசா கிடைத்து வந்தால் பாட்டி, குறும் திரைப்பட விழா மற்றும் பல பாடசாலை விழாக்களில் ஒன்றாகத்தான் கூடுகின்றோம், குலவுகின்றோம். அச்சமயங்களில் அரசியலே கதைப்பதில்லை. பார்ட்டி முடிந்து வந்தவுடன் தனது குறுப் நண்பர்களுக்கு போன் பண்ணி “குலத்தாரும் பார்ட்டிக்கு வந்திருந்தார். முகம் பேயறைஞ்ச மாதிரி போய்க்கிடக்கு. மனுஷன் மூச்சு விடவில்லை” என்பதும். “கரன் வந்திருந்தார் அதே பழைய புளட் கதைதான் கதைக்கின்றார்” என்பதுமாகத்தான் இருக்கின்றோமே தவிர முப்பது வருடமாகத் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கின்ற அந்த………..என்னசெய்தோம். செய்கின்றோம் என்று கேட்டால். மொத்தமாக பூஜ்ஜியமே மிஞ்சிக் கிடக்கின்றது. ஏன் இந்தப் பாட்டிகளிலும்,விழாக்களிலும் உங்கள் கருத்துக்களை மெல்ல மெல்ல அவர்களிடம் சேர்ந்தோ தனித்தோ சொல்லக் கூடாது. இப்போது அவர்கள் அரவணைக்க ஆளில்லாமல் இருக்கின்றனர்.
நமது கருத்துக்களையும்,தலைவர் எங்கு பிழை விட்டார், விட்டிருப்பார் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்ள தயாராயிருப்பர். ஆனால் நாம்தான் ஐயோ இவர்களா என ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றோம். எனக்குத் தெரிந்து பலர், பல குடும்பத்தினர் இப்போதுதான் தேனீ, இலங்கை நெற், சூத்திரம், தேசம், நெருப்பு, மீன்மகள் என்றெல்லாம் இணையத்தளம் இருக்கின்றதா எனக் கேட்டு மலைக்கின்றனர். பார்த்து விட்டு இப்படி ஒரு உலகம் இருக்கின்றதா எனக் கேட்கின்றனர்.ஏன் இந்த இணையத்தள நிறுவனர்கள், அதை வாசிப்பவர்கள் புலியை வசை பாடுபவர்கள் இந்த இணையத்தளங்களின் விபரங்களை துண்டுக் காகிதங்களில் குறித்து வைத்து இந்தப்பார்ட்டிகளிலும்,விழாக்களிலும் ஆங்காங்கே வீசி விடலாம்தானே ! கிறினேட் துரோ பண்ணிய நமக்கு துண்டுக்காகிதம் வீசுவது ஒரு பொருட்டல்லவே. வீடு திருந்தினால் தானே வீடு திருந்தும், அப்புறம் வீதி, அப்புறம் கிராமம், நகரம் என ஏதாவது செய்யலாம். இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை. நாங்கள் வேறு. அவர்கள் வேறு என்றால்..!? ஊர் கூடி வடம் இழுக்கும் ஐடியாவே இல்லையா ?
புலித் தலைமையை திட்டுவோம், புலி ஆய்வாளர்களைத்திட்டுவோம், புலியின் கொள்கை வகுப்பாளர் களைத் திட்டுவோம்,புலிப் பினாமிகளைத்திட்டுவோம், புலியின் நிதி சேகரிப்பாளர்களைத் திட்டுவோம் ஏதுமே தெரியாத புரியாத புலி ஆதரவாளனை ஏன் திட்ட வேண்டும். 1984களில் மதுரை டவுண் ஹோல் றோட்டில் ஒரு வேளை கஞ்சிக்கு அலைந்த புலியினால் 15வருடம் மொத்த மக்களையும் ஆட்டிப்படைக்கக் கூடிய சக்தியைப் பெற முடியுமானால் ! சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கும் நம்மால் ஏன் ஒரு துரும்பையும் அசைக்க முடியாமல் இருக்கின்றது. நான் இங்கு சௌபாக்கியம் என்று சொன்னது பிரஜா உரிமை, மூன்று நேரம் உணவு, வேலை முடிந்ததும் இன்டர்நெட், மற்றும் எக்ஸட்ரா..எக்ஸட்ரா….இது புலி ஆதரவாளனுக்கு ஆறுதல்சொல்ல வேண்டிய தருணமே தவிர அவர்களை உசுப்பேத்த வேண்டிய தருணமல்ல.அவர்கள் நம்மை போட்டு மிதித்து பந்தாடிய சரித்திரமெல்லாம் நிறைய இருக்கின்றது. அதைக் குத்திக்காட்டும் தருணமல்ல இது. ஒரு கதை சொல்லுவார்கள்.யாரோ ஒரு துறவி ஆற்றோரம் போனாராம்.அங்கு ஒரு குளவி தண்ணீரில் தத்தளித்ததாம்.துறவி அதைக்காப்பாற்றி விட்டாராம். குளவி துறவியை கொட்டிவிட்டு மீண்டும் தண்ணீரில் விழுந்ததாம்.துறவி மீண்டும் அதை காப்பாற்றி விட்டாராம். குளவி மீண்டும் கொட்டி விட்டு நீரில் விழுந்ததாம்.துறவி மீண்டும்……மீண்டும்……இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதுதான் உங்களுக்குத் தீங்கு இழைக்கின்றதே ஏன் அதை காப்பாற்றுகிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு துறவி. அது அதனது குணத்தைக் காட்டுகிறது. நான் எனது குணத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றேன் என்றாராம். நாம் எல்லாம் முடியும் வரை, நல்லதுகள் நடக்கும் வரை துறவியாக இருந்தாலென்ன. பல வருடமாக நாம் துறவியாக வாழ்ந்ததனால் தானே இன்று மூச்சு விடுகின்றோம். இன்னும் கொஞ்ச காலம் “கெட்டவைகளை பார்க்காமல், கெட்டவைகளைப் பேசாமல், நல்லவைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன ?தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பவர்களை மாறி மாறி அவர்களும், நாமும் திட்டிக் கொண்டிருக்கின்றோம். பாவம் செய்தி வாசிப்பவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் தொழிலை,அவர்களது முதலாளி இட்ட வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த துறவிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு ஜனநாயக தொலைக்காட்சி நிறுவனத்தை நிறுவி இந்த செய்தி வாசிப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தயாரானால் அடுத்த நிமிடமே உண்மையின் பக்கம் இவர்கள் நிற்பார்கள். ஏனெனில் சகல விடயமும் தெரிந்த அவர்கள் சம்பளத்துக்காக என்ற ஒன்றைத்தவிர வேறு எந்த நோக்கத்துக்காகவும் அங்கு செய்தி வாசிக்கவில்லை. முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான செய்திகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஓரு சகோதரி ஒரு முன்னாள்,இந்நாள் புலி எதிர்ப்பு முழு நேரப் போராளியின் மகள். இன்னும் பல ஆயிரம் உதாரணம் சொல்லலாம். எது நடக்க இருந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நிச்சயம் நடக்கும் என நினைப்போம்.புலி “புலி எதிர்ப்பாளர்களை” குத்தி குதறியது மட்டுமல்ல!இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், இயக்கங்களில் சம்பந்தமே இல்லாதவர்களுமென பல லட்சம் பேரை யுரோப்பிய சிற்றிஷன்களாக்கிய முழுப் பெருமையும் புலியை அல்லவா சாரும். சரி. சிறிலங்காவில் எல்லாப்பிரச்சனையும் முடிந்து விட்டது ,புலி அழிந்து விட்டது. ஊருக்குப் போய் இயக்கம் கட்டப் போகின்றேன் என்று உங்கள் மனைவிமாரிடமும், பிள்ளைகளிடமும் சொல்லும் தைரியம் எமக்குண்டா! போகத்தான் விடுவார்களா!? முற்றும் துறந்த புலிப்பினாமிகளையே பாதை திறந்திருந்த காலத்தில் ஊருக்குப் போக மனைவிமார்அனுமதிக்கவில்லை. “உங்களுக்கென்ன பைத்தியமா? சிங்களவனிடம் ஏதாவது சொல்லி தப்பிடலாம். எங்கடவர் புடிச்சி வைச்சிருவாங்க அப்பு” என்று சொல்லித்தடுத்த மனைவியர்தான் அதிகம். சிலர் கொழும்புக்கு பழைய நெஷனல் ஐ.டி.யைத் தருவித்து. யுரோப் பாஸ்போட்டை கொழும்பில் ஒழித்து வைத்து விட்டுப் போன சரித்திரங்களுமுண்டு.இப்போது அங்கு இப்போது மிஞ்சி. வக்கற்றவர்களாக இருக்கும் வன்னி,யாழ் மாவட்ட மக்கள்தான் சிங்களத்துக்கும், புலிக்கும், ஏனைய அமைப்புக்களுக்கும் திரும்பவும், திரும்பவும் முகம் கொடுக்கவேண்டியவர்களாக மாறப்போகின்றனர். மாறவேண்டும்.இவர்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம், செய்யப்போகின்றோம். அரசு தரப்பு, புலித்தரப்பு என்ற இரண்டைத்தவிர இடையில் இடைத்தரப்பு என்ற ஒன்றுமே இல்லாமல் சுத்த சூனியமாக இருக்கின்றதே!? இவ்வளவு காலமும் வாழாவிருந்து விட்டு இப்போதுதான் கனைக்கத்தொடங்கியுள்ளோமா!? இல்லை வன்னியில் நடப்பது எல்லாம் எங்களுக்கும் தெரியும் என்றால், அங்கு என்ன நடக்கின்றது? 3லட்சம் பேரா? 75ஆயிரம் உயிர்களா? உங்களது ஆட்கள் ஏதாவது போட்டோ புகைப்படம் அனுப்பினார்களா? உங்களது ஆட்கள் ஏதாவது டெலிபோன் செய்தி அனுப்பினார்களா? அவை எங்கே! எதுவுமே இல்லை.எந்த தகவலுமே நம்மிடம் இல்லை.
சரி. நம்மிடம் எவ்வித தகவலும் இல்லை. இப்போது வன்னியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற என்ன வழி? வன்னியிலுள்ள மன்னிக்கவும் புதுக்குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பிடிபட்ட பங்கர்கள், பிடிபட்ட ஆயுதங்கள், லக்ஸறி பங்களாக்கள், நீச்சல் தடாகங்கள், விலையுயர்ந்த மதுபான போத்தல்கள் பற்றியெல்லாம் தெரியுமா? அதை அரசு தெரியப்படுத்தியதா ? இவைகளையெல்லாம் அழகிய புகைப்படங்களாக எடுத்து அழகிய தமிழில் எழுதி குண்டு வீசும் விமானங்களில் (குண்டுக்குப் பதிலாக) இத்தகவல்களையாவது வீசச் சொல்லலாமே! செய்தோமா ? இனியாவது செய்வோமா? போன வாரம் நண்பர் ஒருவரின் மனைவி புதுக்குடியிருப்பில் இருந்து அதிகாலை 4மணிக்கு போன் செய்தார்.(நண்பரின் மகள் ஒரு புலிப் பொறுப்பாளர்). 22 நாட்களாக பங்கருக்குள் இருக்கின்றார்கள். சிறு நீர்,மலம், வாந்திபேதி, அம்மை என அனைத்துமே பங்கரில்தானாம். ஆறு வயது மகள் உணவில்லாமல் 4நாட்களாக தேங்காயைத் தின்று கொண்டிருக்கின்றார்களாம். அவர்களுக்கு எதுவுமே தெரியாதாம். கிளிநொச்சி பிடிபட்ட செய்தி தெரியவே தெரியாதாம். “அடி விசறி ஆமிக்காறர் எல்லாவற்றையும் பிடிச்சிற்றாங்கடி”என்று இவர் சொன்ன பின்னர்தான் புலி பொறுப்பாளரான அவரது மகளுக்கே உண்மை தெரியும். இங்கு புலிக்கெதிராக பாரத யுத்தம் நடாத்திக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இந்த மக்களைப்பற்றி யோசிக்கிறோம். மக்கள் தொடர்ந்தும் மந்தைகளாக இருக்கமாட்டினம். தலைக்கு மேலே வெள்ளம் போனால்…. என்று புறப்பட்டுவிடுவார்கள். “மன்னர் ஷா”வுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்த மொத்த ஈரானிய மக்களும் உண்மைகள் அனைத்தும் ( தங்கத்தில் மலசல கூடம் முதல் முத்துக்கள் பதிக்கப்பட்ட கால் செருப்பு வரை) தெரிந்தவுடன் மன்னர் ஷாவின் மாளிகையை வளைத்து மாதக் கணக்கில் உட்கார்ந்திருந்து மன்னர் ஷாவை நாட்டைவிட்டு துரத்தினர். ஆயுதமின்றிய போராட்டம். மக்களிடம் இருந்ததெல்லாம் துணிவும், ஆயதுல்லாஹ் கோமய்னி மீதிருந்த பக்தியும்தான். நாம் துரத்த வேண்டிய எவ்வித அவசியமுமில்லை. உண்மைகளை புரிய வைத்தால் போதும். புரிந்து கொள்வார்களா ?
உண்மைகளை புரிய வையுங்கள் அது போதும்

திங்கள், 2 மார்ச், 2009

நாலு வார்த்தை பேசவிடு எழுதவிடு சேரனின் கட்டுரை பற்றி ……வசிட்டர்.

நாலு வார்த்தை பேசவிடு எழுதவிடு சேரனின் கட்டுரை பற்றி ……வசிட்டர்.

சேரன் குறிப்பிட்ட பத்திரியாளர்கள் பத்திரிகைகள் பற்றிய விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் ஏன் இவ்வளவு பிந்தி இந்த எண்ணம் வந்தது சேரனுக்கு. சின்னபாலா கொல்லப்பட்டபோது சொல்லமுடியாமல்போன வார்த்தைகள் பலருக்கு ஏன் இப்போது வருகின்றது?
இரட்டை நிலைப்பாடு பலரை பல இடங்களில் காப்பாற்றி இருக்கிறது. அது இல்லாத பலர் கொல்லப்பட்டார்கள். கொலையைக் கண்டு பயந்து புதியவர்கள் உருவாகாமல் இருக்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுதான் நியதியும் கூட.
சேரனின் பின்வரும் பகுதியில் எனக்கு நிறைய உடன்பாடு உள்ளது.

“இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குச் சுதந்திரமாகப் போய்வர எத்தகைய தடைகளும் இல்லாத காலத்திலும்கூட ஊடகவியலாளர்கள் பலர் இப்பகுதிகளுக்குச் செல்வதில்லை. கொழும்பின் சொகுசான குடியிருப்புகளில் வாழ்ந்தபடி இராணுவத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் சொல்வதை அப்படியே திருப்பி எழுதி அனுப்பிவிடுவதே வழமையாக இருந்து வருகிறது. வாய்பாடுபோல ‘இப்படி இராணுவம் சொல்கிறது’ என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடுவது மட்டும் ஊடக அறத்தை நியாயப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது”.

ஆனால் இயக்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட கொலைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டாமை பற்றியோ குறைந்தபட்சம் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையிலே ஒரு கண்டன அறிக்கை கூட எழுதமுடியாத அல்லது எழுத விரும்பாத பத்திரிகையாளர்கள் பற்றி பெரிதாக குறிப்பிட விரும்பாமல் சேரன் விலகி சென்றிருப்பது சாதாரண பத்திரிகையாளர்கள் போல் தேசியத்தின்பால் கொண்ட பற்றுதல் காரணமாக என்று கொள்ளலாமா?
இன்றைய வன்னியின் அவலநிலை பற்றி நமக்கு இருக்கின்ற வேதனையும் துயரமும் நியாயமானதுதான் அதனால்தான் சகல பத்திரிகையாளர்களும் குரல் கொடுக்கின்றார்கள். ஒரு மாபெரும் மனித அவலத்தைப் பார்த்து வாழாதிருக்காது செயல்படுகின்றது உலகத்தழிழ் எழுத்துலகம். “மக்களின் வாழ்நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவது ஒரு வரலாற்று தவறு” இதை வார்தைப்பிசகின்றி அனைத்து பத்திரிகையாளர்களும் முன்வைக்கின்றார்கள். அது வரவேற்கப்பட வேண்டியதுதான்.ஆனால் அன்று வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இந்த வரலாற்றுத் தவறு எத்தனை பத்திரியாளர்களின் பேனாவால் எழுதப்பட்டது. இன்றும் அந்த மக்கள் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்களே இந்த உதாரணங்கள் ஏன் சேரனின் கட்டுரைக்குள் எடுத்தாளப்படாமல் போய்விட்டது சொல்ல வார்த்தைகள் இல்லையா?

சில ஊடக அமைப்புக்களின் பட்டியலைத் தந்து ஊடக சுதந்திரத்திற்கான துணிச்சலான போராட்டங்களை செய்து உலகளாவிய ஆதரவைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.உண்மைதான் அவர்களின் போராட்டம் பாராட்டுக்குரியதுதான். ஆனால் அந்தப்போராட்டம் அரசாங்கத்தின் மீறல்களை மட்டும் தான் கண்டுகொள்ளுமா? இயக்கங்களால் நசுக்கப்படும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக எவ்வளவு தூரம் நடாத்தப்பட்டுள்ளது? இங்கே தேசியம் என்ற திரை பேசவிடாமல் செய்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஊடகவியலாளர்களைப் பற்றி கூறவந்த சேரன் ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் இருக்கின்ற கருத்துச் சுதந்திரம் பற்றியும் பேசியிருக்கவேண்டும். அந்தக்கருத்துச் சுதந்திரத்தின் மறுதலிப்புத்தான் “இனம் தெரியாதவர்களால் சுடப்பட்டார்” என்ற பத்திரிகையாளர்களின் வாக்கியம். இதுவும் பத்திரிகையாளர்களின் இரட்டை நிலைப்பாடா?
கட்டுரையின் முடிவில் சேரனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்தான் இனி எமக்கு தேவையானது. காலம் கடந்தாவது அந்த நடைமுறைக்குள் நாம் எல்லோரும் வரவேண்டும். இது பத்திரிகைளாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பொருந்த வேண்டும். ஆயுதங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிரான ஒரே குரலாக இருக்கவேண்டும்.

சேரனின் கட்டுரையின் இறுதிப்பகுதி.
‘ஊடகவியலாளர்கள் என்ற முறையில் எத்தரப்பைச் சார்ந்த ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகிறபோது அல்லது காணாமல்போகிறபோது அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டும். இது இலட்சியம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அரசியல் கடப்பாடும் ஆகும்.
இலங்கைச் சூழலில் இப்போது இவற்றை எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?”

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது வீசுதென்றல் ஆசிரியர் குழு.


வசிட்டர்
வித்தியாதரன் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் மிகப்பிரபலமான ஊடகவியலாளர். இவரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தற்போது கூறினாலும் உண்மையில் அவரை மகிந்த மலர்ச்சாலையில் இருந்து கொண்டுசென்ற விதம் பற்றி பார்த்தவர்கள் கூறுவதைப்பார்க்கும்போது அது ஒரு கடத்தல் போன்றே தோன்றுகின்றது. உதயன் பத்திரிகை அதிபர் எடுத்த உடனடி நடவடிக்கைகளால் வித்தியாதரனின் கடத்தல் கைதாக மாற்றம் பெற்றுள்ளதென நம்புவதற்கு ஏதுவாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை வீசுதென்றல் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கை அரசோ காவற் துறையினரோ இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாது செயல்படுவது மக்களுக்கு அரசின்மேல் மதிப்பை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வித்தியாதரன் அவர்கள் ஒரு ஊடகத்தின் பிரதம ஆசிரியராக இருந்துகொண்டு செயல்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியை முன்வைத்தால் இல்லை என்பதே விடையாகும். பத்திரிகை ஆசிரியனுக்கு ஒரு தர்மம் இருக்க வேண்டும். தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்க வேண்டும், நியாயத்தின் பக்கம் குரலை உயர்த்தவேண்டும். ஒரு பக்கச்சார்பான வாதங்களை வைப்பதும் அதை பிழை என்று தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக சரிஎன்று எழுதுவதும் ஊடகவிலாளர்களுக்கு இருக்கக்கூடாது. எந்தக் கொலையையோ கடத்தலையோ ஒரு பத்திரிகையாளன் மறைக்க முற்படுவதோ அல்லது நியாயப் படுத்துவதோ சரியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை அது ஒரு முக்கியமான தேவைக்காகத்தான் செய்யப்பட்டது என்று பத்திரிகையாளன் சொல்பவனாக இருந்தால் அவன் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு பாத்திரம் கழுவும் தொழிலைச் செய்யலாம் அது கௌரவமாகவும் இருக்கும் ஆபத்து இல்தாததாகவும் இருக்கும்.
அரசாங்கம் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவை எல்வாவற்றையும் இப்போது நடைமுறைப்படுத்துகின்றது இந்த ஊடகவியலாளர்கள் கடத்தல் கொலை என்பனவும் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். இதன்மூலம் குறுகிய பாதையில் பிரச்சினையை தீர்த்துவிடலாம் போல் தோன்றும் ஆனால் தொலைநோக்கில் பார்தால் அது அழிவில்தான் முடியும் இதற்கு புலிகளே நல்ல உதாரணம்.
பத்திரிகைகள் தவறான செய்தியை வேண்டுமென்றே போடும் போது அரசாங்கத்திற்கு கோபம் உண்டாவது தவிர்க்க முடியாததுதான். அதற்காக தவறான முறைகளை கையாள்வது தவறாகும். வித்தியாதரனுடைய விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விரும்பியிருந்தால் அவரை முறையாக கைது செய்திருக்க வேண்டும். அவர்கள் சார்ந்திருப்பது பதிவுசெய்யப்பட்ட ஊடகங்கள், பதிவே இல்லாத இணையத்தளமல்ல ஆகவே நீதிமன்றம் கொண்டு சென்று பொய்யான தகவல்கள் பிரசுரித்தமை, மக்களை தவறாக வழிநடத்தியமை.. என்ற குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையில் அடைக்கப்படல் வேண்டும். அதைக்கூட நீதித்துறையிடம் விட்டுவிடவேண்டும். அரசியல் தலைவர்கள் மூக்கை நுளைக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்கு சட்டத்தில் இடமில்லாதிருந்தால் சட்டத்தை திருத்த வேண்டும். இப்படிச் செய்தால் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறிய அவப்பெயர் அரசாங்கத்திற்கு ஏற்படாது அத்தோடு பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்காத பத்திரிகையாளர்களையும் நல்வளிப்படுத்த முடியும். அரசு இதை மேற்கொள்ளுமா? பத்திரிகையாளர்கள் சரியானவற்றுக்கு குரல் கொடுப்பீர்களா? எங்கள் இளம் சந்ததியினருக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக் கொடுப்பீர்களா? கொலை வெறிபிடித்து அலையும் காட்டுமிராண்டி தனத்தை ஒதுக்குவோம். நல்ல பத்திரிகையாளர்களாக மாறுவோம். நாம் எம்மைத்திருத்தினால் உலகம் தானாக திருந்தும் என்பதை நம்புவோம் ஏனென்றால் நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் உலகம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள்.


ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள்.

முழுவதும் பார்க்க

உதயன் சுடரொலி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்:

இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள்இ கடத்தல்இ மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்.சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கல்கிஸ்ஸை மஹிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று காலை 9.15 மணியளவில் முறைப்பாடு கிடைக்கபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னியின் இந்த வாழ்வு யாரால்?


வன்னியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களின் நிஜ வாழ்வு இப்படங்களில் இருந்து அறிய முடிகின்றது. மரங்கள் அற்ற கடற்கரை வெளி, பங்குனி உச்ச வெயிலை நோக்கிய மாசி மாதம். தண்ணீர் வளமற்ற பிரதேசம். சீலை விரிப்புக்களால் ஆன வீடுகள். வெளிநாடுகளில் ஏசி அல்லது சூடேற்றப்பட்ட வீடு மீன்வாங்க செல்ல கூட பயன்படும் கார். திறந்தால் குடிக்க குளிக்க தண்ணீர். கூடவே வார இறுதி நாட்களில் களியாட்டங்கள். உயிர் போனால் லம்சமாக பெற காப்புறுதிகள் இன்னும் பல… இப்படி இருந்து கொண்டு போர் முரசு கொட்டலாம் தானே. கொல்லப்படுவது என் பிள்ளை இல்லைதானே. வாழ வழி இல்லாத ஏதிலிகள்தான். தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிள்ளைகள், குடும்பங்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில். நன்றாக போர் முரசு கொட்டுங்கள் 3 நாட்களில் 1000 இராணுவம் சாகலாம் 3000 காயப்படலாம். என்ன என் பிள்ளையா? உன்பிள்ளையா? ஊரார் வீட்டுப்பிள்ளைகள் தானே!
நன்றி www.sooddram.com

சனி, 21 பிப்ரவரி, 2009

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 215 கிலோ கிராம் வெடிகுண்டுகள். தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு


சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 215 கிலோ கிராம் வெடிகுண்டுகள.; தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு
கட்டுநாயக்கவில் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட புலிகளின் இலகு ரக விமானத்திலிருந்து 215 கிலோ வெடி மருந்து மீட்கப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
சதுப்பு நிலப் பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளதாகக் கூறிய விங் கமாண்டர் நாணயக்கார கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிகளின் இரு விமானங்களும் ணுழியினி 143 ஷி ரக செக் குடியரசின் தயாரிப்பாகுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொழும்பு நகருக்குள் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு ஊடுருவியதை அறிந்த விமானப் படையினர், புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டனர். கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகர் இருளில் மூழ்கியது.
புலிகளின் விமானங்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கொழும்பு நகரை அண்டிய நேரம் வரையில் விமானப்படை தலைமையகத்துக்கு தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன.
இதனாலேயே புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதற்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது எனவும் விமானப்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் விமானப்படை தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்த வந்த புலிகளின் விமானம் ஒன்று சூட்டுக்கு இலக்காகி இறைவரித் திணைக்களத்தில் மோதி விழுந்தது.
இப்பகுதியை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் படையதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். விமானத்தின் பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. விமானியின் உடல் பாகங்களும் விமானச் சிதைவுக்குள்ளிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று சுமார் 215 கிலோ எடைகொண்ட சீ. 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளுடன் பறந்த மற்றுமொரு விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்திய பின்னர் கட்டு நாயக்க விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து சென்ற போது விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானியின் சடலம் மற்றும் சயினைட் வில்லை, டிஜிடல் கமரா, புலிகளின் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவையும் நொருங்கிய விமான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன.
நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளன என்ற தகவல் அறிந்த மறுகணமே கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீதிகளில் செல்லும் வாகனங்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு மின்விளக்குகள் அணைக்கச் செய்யப்பட்டன.
விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறை இயங்க ஆரம்பித்தன. கொழும்பு லேக் ஹவுஸ¤க்கு முன்பாகவுள்ள சிற்றம்பலம் ஏ. கார்டின் மாவத்தையிலுள்ள இறைவரித் திணைக்களத்தின் முன்னால் புலிகள் வீசிய குண்டு விழுந்து வெடித்துள்ளது.
விமான எதிர்ப்பு ஏவுகணையின் தாக்குதலுக்குள்ளான விமானம் இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்துச் சிதறியது.
விமானத்தின் தாக்குதல் காரணமாக ஒரு விமானப்படை வீரர் உட்பட ஏழுபேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
(தினகரன்)

புதன், 18 பிப்ரவரி, 2009

மேற்குலகு ஏன் மிதிக்கிறது. தமிழ்நாத கட்டுரைக்கு ஓர் பதில்

வசிட்டர்
தமிழ் நாதத்தில் வெளிவந்த கட்டுரை புதினம் இணையத்தளத்தில் மீள் பதிவு செய்யப்பட்டிருந்தது. யார் எழுதியது என்ற பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை ( புனை பெயர் கூட இல்லாமல் உள்ளது) இதற்கான என் பதிலை முன்வைக்க விரும்பினேன். புதினத்தில் பதிவதற்கான தொடர் இல்லாத காரணத்தால் . வீசுதென்றல் இணையத்திற்கு அனுப்புகின்றேன். புதினமோ தமிழ்நாதமோ பிரசுரித்தால் அது அவர்களின் பத்திரிகா தர்மத்தை விளம்பும்.கட்டுரையாளர் ஆரம்பிக்கும்போதே இந்தியாவும், மேற்குலக நாடுகளும் செய்கின்ற சதிதான் இன்று தமிழ் மக்களின் இன்றைய நிலை என்று ஆரம்பிக்கின்றார். இது புலியை ஆதரிக்கும் ஆய்வாளர்;களுக்கு இப்போதுதான் தெரியவருகின்றதா? இதை எண்பதுகளில் திரு .மு திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய தெற்காசியாவும் தேசிய இனப்பிரச்சினையும் என்ற கட்டுரையில் மிகத் தெளிவாக காட்டிவிட்டார். அதை விட அரசியல் அறிந்த ஈழப் போராட்டக் குழுக்கள் பல இவற்றையெல்லாம் மிகத்தெளிவாக கூறியுள்ளது. இவற்றை புலிசார்பு ஆய்வாரள்கள் அறிந்துகொள்ளவில்லைப் போலும். இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இடதுசாரி அமைப்புகளை தடை செய்து ஏகாதிபத்தியங்களின் விருப்பை நிறைவுசெய்தது யார் என்பதை ஏன் பார்க்க மறுக்கின்றார். புலிகள் தான் மக்கள் போராட்டத்தை மறுத்து ஆயுதம் ஏந்திய சிறு குழுவால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று நம்பியவர்கள் போராட்டவடிவத்தை சிதைத்தபெருமை அவர்களுக்குத்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்களா?
அனைத்தையும் மற்றவர்களின்மேல் பழி போடும் இவர் சமாதான காலத்தை பார்க்கின்றார். சமாதான காலத்தில் உண்மையான சமாதான நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டார்களா? நல்லெண்ணத்தைக் காட்டுவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தையே காட்டினார்கள், தங்கள் ஆயுத பலத்தையும் ராணுவ பலத்தையும் சந்தர்பத்தை பயன்படுத்தி பெருக்கிக் கொண்டுபோனார்கள். உலகம் முழுவதும் ஊடகங்களைப் பெருக்கிக்கொண்டும் உலக தமிழ் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் வெற்றியும் கொண்டார்கள். அதனால்தான் இன்று உலகத்தில் உள்ள பத்திரிகைகள் புலிகள் சொல்பவற்றை அப்படியே ஒரே அச்சில் வரிக்குவரி வித்தியாசம் இல்லாது போடுகின்றார்கள். ஆனால் அரசியல் ஆய்வாரள்கள் என்ற பெயர்மட்டும் வேறுவேறாக இருக்கும். ஆயுதம் இல்லாத மாற்றுக்கருத்துள்ளவர்கள் மக்களுக்கு அரசியல் விளக்கத்தை கொடுத்துவிடுவார்கள் என்று அதிகளவில் கொலை செய்யப்பட்டதும் இதே சமாதான காலத்தில்தான்.
வரலாற்று புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்து உருவாக்கிய பெருமை பாலா அண்ணையை சாரும் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுகிறார் கட்டுரையாளர். ஆனால் எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வரைபை வைத்துவிட்டு ( இராணுவம், கடல்வளமும் கடல் பாதுகாப்பும். அன்னிய நிதி மூலதனம்) புலம்பெயர் அரசியல் ஆய்வாளர்களைக்கொண்டு ( இவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் தொடங்கிய காலத்தில் அரசாங்கத்துடன் நிண்டுகொண்டு போராட்டத்தை எதிர்த்தவர்கள் அல்லது தமிழ்மக்களை ஈழக்கதை சொல்லி ஏமாற்றி வாக்கு வங்கியை நிரப்பிய கூட்டணியினருடன் நின்றவர்கள் இவர்கள் எதையும் முடிந்தபின்தான் யோசிப்பவர்கள் ) நியாயப்படுத்த பார்த்தார்கள் யாராவது கொஞ்சம் அரசியல் தெரிந்தவன் கேள்வி கேட்டுவிட்டால் “தலைவர் கூடுதலாக கேட்டால்தான் சிங்களவன் கொஞ்சமெண்டாலும் கொடுப்பான்” என்று சப்புக்கட்டு கட்டினார்கள். இது எந்த உலக அரசியலிலும் இல்லாத மக்களை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு தங்களையே ஏமாற்றினார்கள். அதன் விளைவு நியாயமற்ற கோரிக்கையென உலகம் எள்ளி நகையாடியது. உண்மையாக தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கையை வைத்திருந்தால் நியாயம் நம்பக்கம் இருந்திருக்கும்.
போர்நிறுத்த உடன்படிக்கையில் ஒத்துக்கொண்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை அதற்கு மேற்குலகு அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறும் கட்டுரையாளர் புலிகள் செய்த தவறுகளை ஏன் பார்க்கவில்லை. இடுப்புப்பட்டி அணிந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லும் உரிமை, அரச கட்டிடங்களில் புலிக்கொடி பறக்க விடும் உரிமை என செப்புக்காசிற்கு பெறுமதியில்லாத விடயங்களில் முரண்பட்டு கொண்டு நம்பிக்கையீனமாக நடந்துகொண்டமை. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசியல் செய்வதாகவும் மக்கள் எழுச்சி மாணவர் எழுச்சி பொங்கு தமிழ் இப்படி ஏதோ ஒன்றைக்கூறி குண்டெறிந்து இயல்பு நிலையை திட்டமிட்டே குழப்பியது போன்றவை செய்யப்பட்டது உடன்படிக்கைக்கு ஏற்றதாகவா இருந்தது.
சமாதான காலத்தில் உலக நாடுகள் தடைசெய்ததைப்பற்றி அங்கலாய்கும் கட்டுரையாளர் புலிகள் செய்த தவறுகள் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? பத்திரிகையாளர்கள். மாற்று இயக்க உறுப்பினர்கள், தங்களோடு ஒத்துவர மறுத்தவர்கள் என்று போட்டுத்தள்ளியது அரசாங்கமா? ஏ9 வீதியில் ராணுவத்தை விட மோசமாக மக்களுக்கு சென்ற உணவுப் பொருட்களை வீதில் இறக்கி சோதனை செய்து வரி என்ற பெயரில் கப்பம் பெற்றபின் திரும்ப ஏற்றச்செய்வது ( இந்த ஏற்றி இறக்கும் செலவினங்கள் கப்பம் என்பவை தமிழ் மக்கள் மேலேயே சுமத்தப்பட்டது. கட்டட தேவைக்காக கொண்டு செல்லப்படும் மணல்கூட பறித்து மீண்டும் ஏற்றப்பட்ட அநாகரிகமான செயல் புலிகளால் புலிகளின் தமிழீழத்தில்தான் இடம் பெற்றது. சொந்த மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரங்களையும் சீரளித்த குற்றம் இவர்கள்மேல் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளைச் செய்ததனால் உலக நாடுகள் தடைசெய்ததை எப்படி நியாயப் படுத்தப்போகிறார் கட்டுரையாளர்?
ஜனநாயக வாதிகள் வைத்த கோசங்களுக்கு செவிசாய்க்காது. இலகுவாக தீர்த்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது புலிகளின் தான் என்ற மமதை, இந்தியாவை ஓட ஓட விரட்டியது என்னும் இறுமாப்பு, இராணுவத்துடன் சம பலனில் இருப்பதென்ற கற்பனை. இதனால் மக்கள் பற்றியோ மக்களின் தேவைபற்றியோ அல்லது மக்கள் விருப்பங்கள் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத போக்கு இருந்த எல்லாச் சந்தர்ப்பங்களையும் இளக்கவைத்துள்ளது.
கடைசியாக கட்டுரையாளர் புலிகள் வாழவேண்டும் புலிகள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது என்று ஒரு பூச்சாண்டி காட்டுகின்றார். இப்படித்தான் 35 வருடங்களாக தமிழ்அரசுக்கட்சி பின்பு தமிழர்கூட்டணி என்றும் அவர்கள் இல்லாவிட்டால் தமிழன் அழிந்துவிடுவான் என்றும் பூச்சாண்டி காட்டப்பட்டது. இனவெறியை தூண்டித்தூண்டியே காலம்காலமாக பாராளுமன்ற கதிரைகளை தக்கவைத்துக்கொண்டார்கள். விழித்தெழுந்த சில தமிழர்களால் அவர்கள் தலைமை தூக்கி எறியப்பட்டது. முழு மக்களுமே அந்த போரின்பின் நின்றார்கள். புதிய தலைவர்கள் புதிய வழிகாட்டிகள் உருவானார்கள். இன்று புலி இல்லாவிட்டால் தமிழனே அழிந்து விடுவான். புpரபாகரன் இல்லாவிட்டால் தலைவர்களே இல்லாது தமிழினம் தத்தளிக்கும் என்று புலி ஊடகங்கள் குப்பை கொட்டுகின்றது. தமிழ் இன வெறி முன் எப்போதும் இல்லாதததுபோல் தூண்டிவிடப்படுகின்றது. புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிழக்குமாகாணம் , கொழும்பில் உள்ள தமிழர்கள் எல்லாம் அழிந்தா போய்விட்டார்கள? வாழ்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கிழக்கிலும் வடக்கிலும் புலிகள் குண்டு எறிகின்றார்கள், கண்ணி வெடி வைக்கின்றார்கள் அப்போதாவது சிங்கள இராணுவம் வந்து தமிழர்களை கொல்லவேண்டும் சுட வேண்டும் என்பதற்காக எத்தனையோ பாடு படுகின்றார்கள். ஆனால் சிங்கள இராணுவம் புலிகளின் தந்திரங்களில் சிக்காமல் கவனமாக இருக்கின்றார்கள். இயல்புநிலையை குழப்பி லாபம் அடைய முற்படுவது புலிகளே.
இன்று வன்னியில் மக்கள் கொல்லப்படுகின்றார்கள் , புலிகளுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது. இதன்போது கொல்லப்படும் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது இது கண்டிக்கப்பட வேண்டியது. அரசாங்கம் இதில் மிகக் கவனம் எடுக்க வேண்டும். அதே நேரம் மனித நேயமில்லாது புலிகள் மக்களை விரும்பிய இடத்திற்கு போக விடாமல் தடுத்து வைத்துள்ளதும். மக்கள் செறிந்து வாழ்கின்ற இடஙகளில் நின்று மோட்டார்க் குண்டுகள் வீசுவதும் , மக்களை அரணாக பாவிப்பதும் அனைத்து மக்களாலும் கண்டிக்கப்படவேண்டியதாகும். இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்போதுள்ள சொற்ப இடத்தில் இருந்தும் புலிகள் ஒழிக்கப்பட்டால் கிழக்கு மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம் போன்று மக்கள் நிம்மதியாக வாழ முடியும். புலிகள் ஓளித்து நின்று குண்டெறியாமலும் கண்ணிவெடி வைக்காமலும் இருந்தால் 35 வருடங்களாக அல்லல் பட்டு ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்கள் சற்று நிம்மதியாக இருப்பார்கள்.
கட்டுரை ஆசிரியர் கேட்டுள்ளதுபோல் புலம் பெயர் உறவுகள் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும். கோரிக்கைகள் வைக்கவேண்டும். மக்களை புலிகளே கேடயமாக்காதீர்கள் என்றும். மக்களை போக விட்டுவிட்டு போர் புரியுங்கள் என்றும் போராட்டம் நடத்துங்கள். மக்களை அவர்கள் வழியில் விடுங்கள். அரசே முகாமிட்டு மக்களைப் பிரித்து வைக்காதே. என்ற கோசங்கள் முன்வைக்கப’படட்டும். மனித உரிமை பேணப்பட வேண்டும் என்ற அழுத்தம் வேண்டும். இனவெறியை தூண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புலி இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எந்த அழிவும் இல்லை. தலைவர்கள் ஆயிரம் பேர் வருவார்கள் போவார்கள். நல்லவற்றை திட்டமிடுபவர்கள் தலைவராவார்கள். அடக்குமுறையாளர்கள் யாராக இருந்தாலும் அழிவுதான் அவர்களின் முடிவாகும் இது நிதர்சனம்.
வெளிநாடுகள் செவிசாய்க்கவில்லை செவிசாய்க்கவில்லை என்று கூப்பாடுபோடுபவர்கள் சற்று சிந்தியுங்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்யும்போது பயங்கரவாதிகள் என்று பேர் எடுத்து விட்ட புலிகளின் கொடிகள், புலிக்கான கோசங்கள் என்பவற்றை விட்டு விட்டு மக்களுக்கான போராட்டமாக வடிவமையுங்கள். புலியைக்காப்பாற்ற நடத்தும் போராட்டங்களுக்கு செல்லாதீர்கள். அப்படியான போராட்டங்களால் சாதாரண மக்கள் போராட்டமும் வெளிநாட்டு அரசாலும் வெளிநாட்டு ஊடகங்களாலும் திரும்பியும் பார்க்கப்பட மாட்டாது. அதுதான் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்ற திரளுங்கள் அதற்காக மட்டும் போராடுங்கள்.

தமிழ் நாதத்தில் வெளிவந்த அந்தக் கட்டுரை கீழே உள்ளது.


அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... ஜதிங்கட்கிழமைஇ 16 பெப்ரவரி 2009இ 07:57 மு.ப ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்ததுஇ இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும்இ உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும்இ படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18இ 2009
அன்பானவர்களே!
அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்ததுஇ "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.
எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக ஜளுலளவநஅயவiஉயடடலஸ பின்னப்பட்டது என்பதையும்இ நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.
அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான்இ அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.
பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும்இ அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -
இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவதுஇ இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை விளங்கிக்கொள்ளவும் அவற்றை மேவிக்கடந்து நாம் முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.
நிகழ்வு:
தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும்இ மீதி உலகமும் ஜசுநளவ ழக வாந றழசடனஸ இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.
முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.
அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.
முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.
அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.
முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்துஇ பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.
அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்துஇ அரசியல் சக்தியற்றவர்களாக்கிஇ பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.
இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா; முக்கிய பங்காளி - மேற்குலகம்; உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.
இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.
நோக்கம்:
இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்துஇ தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.
ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...
இந்தியா ஒரு காரணத்திற்காகஇ அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காகஇ மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காகஇ இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.
ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்துஇ தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்துஇ தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.
இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாகஇ நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.
அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டனஇ இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும்இ நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.
அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.
நகர்வு - 1:
2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்திஇ புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.
போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்ததும்இ பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கப் பிடிக்கவில்லை.
புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும்இ சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அதற்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.
2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும்இ மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே; இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும்இ யூரோப்பின் யூனியனும்இ ஜப்பானும்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும்இ புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்துஇ பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே ஜனுந-குயஉவழ ளுவயவநஸ அங்கீகரித்தது.
இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும்இ அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள் தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.
அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.
போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.
மேற்குலகம் நியாயத்துடன் செயற்படும் என்று நம்பினர் தமிழ் மக்கள்.
நகர்வு - 2:
ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்துஇ ஆசீர்வாதங்கள் வழங்கிஇ அனுசரணைகள் செய்த மேற்குலகம்இ அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது.
ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும்இ சிலவற்றை மீதி-உலகமும்இ சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.
1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடிஇ சிறிலங்கா அரசு -
உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை. பாடசாலைகளிலும்இ வீடுகளிலும்இ கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை. போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை. மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை. அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத் திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை. 2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.
3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோஇ உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.
எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.
இந்த நேரத்தில் -
உடன்படிக்கையிலும்இ அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரைஇ மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.
இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.
சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டுஇ புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால்இ 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால்இ போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால்இ சிறிலங்காவின் 'சீர்நிலை" ஜளுவயடிடைவைலஸ குலைக்கப்பட்டால்இ அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.
தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.
ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்திஇ சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -
எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.
அதை அது படிப்படியாகச் செய்தது.
நகர்வு - 3:
முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.
இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.
ஒன்று - இந்திய;அடுத்தது - அமெரிக்கா.
இப்போது -
அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயேஇ அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.
பிரிட்டன்இ யூரோப்பியன் யூனியன்இ கனடாஇ ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாகஇ மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.
போரை நிறுத்திவிட்டுஇ தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும்இ அவை அதைச் செய்தன.
தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும்இ அவை அதைச் செய்தன.
எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.
புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு ஊடரளவநச-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போலஇ பல்பரிமாண நோக்கம் கொண்டது.
நகர்வு - 4:
இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -
'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும்இ அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.
'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -
சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது. பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது. சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது. சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது. அதே நேரத்தில் -
இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -
மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோஇ அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -
ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது. இரண்டு - அனைத்துலக ரீதியாகஇ தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன்இ வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது. மூன்றாவதும்இ முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும்இ உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது. நகர்வு - 5:
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானதுஇ இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கிஇ படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.
ஆனால் - புலிகள் இயக்கம் தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும்இ எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டுஇ மறு புறத்தில் -
சிறிலங்காவின் பொருளாதாரத்தையும்இ அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும்இ மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.
அதாவது - ஒரு பக்கத்தில்இ சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறைஇ சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிடஇ மறு பக்கத்தில்இ புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.
போர்க் களம்:
முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுஇ மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -
உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும்இ மீதி உலகமும்.
பி.ஜே.பி-யின் ஆட்சி முடிவுக்கு வந்துஇ சோனியா அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியல் ஏறியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.
பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும்இ அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிடஇ பிரபாகரனின் மனவுறுதிக்கும்இ அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது காங்கிரசின் இந்தியா.
இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியாஇ இப்போதுஇ சோனியா அம்மையரின் தலைமையில் - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.
பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த மேற்குலகம்இ இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் தோள் சேர்ந்தது.
தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும்இ வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது - தென்னாசியாவில்இ இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.
முதலாவது களம்:
தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்துஇ அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.
புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டுஇ "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றது.
பணத்தை வழங்கிஇ ஆயுதங்களை வழங்கிஇ போரியல் ஆலோசனைகளை வழங்கிஇ போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கிஇ வானூர்தி ஒட்டிகளை வழங்கிஇ புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கிஇ வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.
அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால்இ அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிரஇ அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.
அடுத்த களம்:
அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.
ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.
தமிழர்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு ஜயேவழையெட ளுநடக-னுநவநசஅiயெவழைஸெ ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதும்இ தமிழர்களுக்கு எனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.
அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும் - எமது சார்பில் - ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில்இ இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.
அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.
அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -
தனியரசைக் கோருவதும்இ சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக ஜடுநபவைiஅயவந யுளிசையவழைளெஸ இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -
அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.
அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும்இ சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும்இ இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கிஇ அதனை நிராகரித்தது.
இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும்இ அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.
இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரசைகளுக்கேஇ அவர்கள் தமது உணர்வுகளையும்இ அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும்இ பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு ஜகுசநநனழஅ ழக ளுpநநஉh யனெ குசநநனழஅ ழக நுஒpசநளளழைஸெ அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.
இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும்இ புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள்இ அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில்இ எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.
இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.
அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும்இ மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டுஇ எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.
அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டுஇ அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை ஜர்ரஅயnவையசயைn ஊசளைளைஸ பற்றி மட்டும் பேசுவது.
இந்த இடத்தில் தான் -
தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும்இ நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.
மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.
அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போதுஇ தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகுஇ எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.
எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.
நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்றுஇ அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசிஇ கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டுஇ மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.
இப்பொழுது -
முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்புஇ நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்புஇ இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -
"தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.
சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லிஇ எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும்இ உடையும்இ மருந்தும்இ போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.
வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள்இ கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள்இ வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள்இ கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள்இ மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.
இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்துஇ மட்டைகள் பிடித்துஇ கோசங்கள் எழுப்பிஇ கடிதங்கள் எழுதிஇ மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.
போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டுஇ போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.
பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.
ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும்இ காங்கிரசின் இந்தியாவும் காத்திருந்தனஇ தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.
அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.
அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது; உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.
ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களைஇ மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.
மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களைஇ 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம்இ மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.
இப்போது -
தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும்இ அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.
கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்துஇ ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போதுஇ முல்லைத்தீவினதும்இ புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.
முப்படைகளையும்இ நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்துஇ மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடுஇ சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.
அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -
'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம்இ நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.
இந்த அணுகுமுறையோடு -
முதலாவதுஇ அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:
புலிகளிடமிருந்து தமிழர்களையும்இ தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்துஇ விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போதுஇ பிச்சை போலஇ தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது. வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால்இ வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்துஇ அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்துஇ பிச்சை போலஇ தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது. இந்த இரண்டு நோக்கங்களில்இ ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும்இ இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன. இப்போது -
உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.
இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோஇ அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.
விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.
போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.
சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால்இ புலிகளின் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.
அல்லது - நாம் காத்திருப்பதைப்போலஇ புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால்இ அதற்கெதிராக இந்த உலகமும்இ காங்கிரசின் இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.
எப்படி?
எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்ததுஇ மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.
உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள்இ நானும் சிந்திக்கின்றேன்.
அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில்இ பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.
சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.
இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால்இ கருத்துக்களால்இ ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.
எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால்இ முழு மேற்குலகமும் எதிர்க்கும்; இந்தியா அங்கீகரித்தால்இ முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.
தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.
பாகிஸ்தானோடு பரவசப்பட்டுஇ சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்குஇ தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -
ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற காங்கிரஸ் காரர்களின் அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.
அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.
தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும்இ என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா இன்று முன்னின்று முயல்வதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.
செய்தி:
முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.
அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.
தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்துஇ தனியரசு உருவாக உதவுங்கள்:அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம். தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள். சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:கருவிகள்இ உளவுத் தகவல்கள்இ ஆளணிஇ ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.
செயல் - 1:
உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும்இ இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை ஜனுநடநபயவழைளெஸ உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
ஒரு தடவையோஇ இரு தடவையோஇ மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல்இ தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும்இ வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும்இ அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -
இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம்இ மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும்இ அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.
"சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாதுஇ" "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்இ" "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்இ" "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்இ" என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.
"பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?இ" "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோஇ பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.
ஆனால்இ நாங்கள் மயக்கமடையாமல்இ திடமாகவும்இ ஒரே சீராகவும் இருந்துஇ தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.
செயல் - 2:
இந்தியத் தூதுவரகங்களின் முன்னால்இ இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும்இ இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.
ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில்இ தூதுவரையும்இ தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால்இ நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.
ஆனால்இ இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -
முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவுஇ அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை ஜகுழசநைபn ஆநனயைளஸ அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும்இ அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.
பேரணிகளை வைத்துவிட்டுஇ சும்மா "புதினத்"திலும்இ "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்துஇ படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.
அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை ஜழேn-வுயஅடை ஆநனயைளஸ அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும்இ இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும்இ அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.
எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும்இ பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.
செயல் - 3:
கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.
தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள்இ இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.
சோனியா காந்தி அம்மையாருக்கும்இ மன்மோகன் சிங் ஐயாவுக்கும்இ அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதிஇ உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.
அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.
முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்

திங்கள், 9 பிப்ரவரி, 2009

வன்னியில் வாழ்ந்த ஓர் தாயின் திடுக்கிடும் தகவல்.

வெளிநாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞன், புலிகளின் சமாதான காலத்தில் வன்னி மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க என்று பல இளைஞர்கள் யுவதிகள் சென்றபோது இவனும் வன்னி சென்றான். அம்மக்களோடு சிலநாட்கள் கழிந்தது. புலிகளின் சுற்றுலாவில் கண்ணைக் கவரும் கல்லறைகளும், வெளிநாட்டு வாகனங்களில் உலாவரும் புலிகளின் இடைநிலைத் தலைவர்களும், அவர்கள் வைத்திருந்த சுடு கருவிகளும் இவனையும் கவர்ந்தது. புலிகளின் உலகப்பொறுப்பாளர் காஸ்ரோவின் வார்த்தையாலங்களால் கவரப்பட்டவன். அவருக்களித்த வார்தைப் பிரகாரம் வெளிநாட்டிற்கு திரும்பி ஒரு வருடமே படித்து முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை முடித்துவிட்டு ( அந்த காலங்களில் வெளிநாட்டு புலி அமைப்போடு ஆழ்ந்த தொடர்புகள் இருந்தது) மீண்டும் வன்னி செல்கிறான். பெற்றோரால் அழுது குளறியும் தடுக்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் வன்னிக்கும் கொழும்பிற்கும் வெளிநாட்டிற்குமாக அலைந்து திரிந்த தாய்க்கு தகவல் கிடைக்கிறது. “அம்மா என்னை எப்படியும் புலிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்” பதறித்துடித்த தாய் மீண்டும் வன்னியை நோக்கி ஓடுகிறாள் ஆறுமாதங்களாக வன்னியில் இவளது மகன் மீட்புப் போர். அந்தக்காலத்தில் அவள் கண்ட வன்னியின் நிலமையை அவள் சொல்லக் கேட்டு அதை அப்படியே தருகின்றேன்.

விசா எடுத்துக்கொண்டு பஸ்சில போறன் எனக்கு பழக்கமே இல்லாத வன்னிநிலப்பரப்பு. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வீட்டில் இறக்கப்படுகின்றேன். விசாலமான வசதிகள் நிறைந்த வீடு. வீடுவசதியாக இருந்தாலும் சுற்று வட்டாரங்கள் பயங்கர அமைதியாகவும் மனிசற்ற முகத்தில ஒரு சிரிப்போ கலகலப்பையோ காணமுடியாது. ஒரு சில தம்பிமார் மோட்டசைக்கிளில வந்து சில கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டு பிறகுவாறம் எண்டு போவினம். பொழுது பட ஒரு பெடியனும் பெட்டையும் வந்தினம் ரெண்டுபேரும் கலியாணம் கட்டியிருக்கீனம். ரெண்டுபேரும் புலியின்ர காம்பிலதான் வேலை. எனக்கு கொண்டுவந்த சாப்பாட்ட தந்தினம். அந்த பிள்ளை சொல்லும் அன்ரி என்ன வேணுமெண்டாலும் கேளுங்க எண்டு. சாப்பாடு தண்ணிவென்னி பழவகை குளிர்பானம் ஒண்டுலையும் ஒரு குறையுமில்ல. என்ர பிள்ளைய நான் எப்பயம்மா பாக்கலாம்? பாக்கலாம் அன்ரி அது வேற பிரிவு எங்களுக்கு தெரியாது அவயள் வந்து சொல்லுவினம். இப்பிடியே நான் கேள்வி கேக்கிறதும் அந்தப்பிள்ள மறுமொழி சொல்லுறதாவும் இருக்கும். அதுகளின்ர முகத்தில ஒரு சந்தோசம் கிடையாது. ஏந்த நேரமும் ஓடுறதும் வந்து படுக்கிறதும் அப்பிடியே போகும்.தங்கச்சி நீங்க என்ன வேலை செய்யுறீங்கள் நான் கேப்பன் கொடுப்புக்கள்ள சிரிச்சுப்போட்டு போவாள். நான் அந்த வீட்ட விட்டு வெளிக்கிடும் வரைக்கும் இந்தக் கேள்விக்கு அதின்ர பதில் அந்த சிரிப்புத்தான். பகல் ரெண்டுபேரும் காம்புக்கு வேலைக்கு போனபிறகு வெளியில போயிற்று வருவமெண்டு நடந்தன் றோட்டில ஒன்றிரண்டு சனத்ததான் பாக்க கூடியதா இருந்துது. நான் பார்த்து சிரிச்சா அதுகள் ஒரு மாரிப்பாத்துக்கொண்டு போகுங்கள். அந்தப்பார்வையில ஒரு கோவம், ஒரு வெறுப்பு தெரியும். இதுகள் ஏன் இப்பிடி எண்டு நினைச்சுக்கொண்டு போவன். ஒரு அம்மன் கோயில் இருக்குது. அதில போயிருந்து அழுவன். அம்மனை ஆயிரம் நேத்திவைச்சு கும்பிட்டன் என்ர பிள்ள எனக்கு கிடைக்க வேணுமெண்டு. அங்க பல தாய்மார்கள் கதறி அழுது கொண்டிருப்பினம். சாப்பாடுகூட இல்லாம மணிக்கணக்கா அம்மனட்ட வாய்விட்டே முறையிடுவினம். எல்லாரும் தங்கட பிள்ளையள புலியள் கடத்திக்கொண்டு போனதால அழுகின்ற தாய்மார்கள்தான். இந்த கோயில் உறவில சிலபேர் என்னோட கதைக்க தொடங்கிச்சினம். அப்பதான் தெரியவந்துது நான் நிக்கிற இடம் வெளிநாட்டில புலியளுக்கு உதவி செய்யிற ஆக்கள் நிக்கிற இடமெண்டும். அதால அங்க நிக்கிற நானும் அப்பிடியான ஆளெண்டு புலி வெறுப்பால என்னையும் வெறுத்து பார்த்த பார்வைதான் அது எண்டு. அதுக்குப் பிறகு சில சனம் கதையள் சொல்லிச்சுதுகள். வீடு வீடா புலியள் சுத்திவளைச்சு பெடியள் பெட்டையள பிடிச்சுக்கொண்டு போவினம் அவசர அவசரமா சுடச்சொல்லிக் குடுத்துப்போட்டு முன்னுக்கு அனுப்பிப் போடுவினம். ரெண்டு மூண்டு கிழமைக்குள்ள பலபேருக்கு செய்தி வரும் வீர மரணமெண்டு. பாவியள் ஒளிச்சோடின பிள்ளையளயும் மாட்டன் மாட்டன் எண்டு சொன்ன பிள்ளையளையும் கொண்டுபோய் கொண்டு போட்டு வீரமரணம் எண்டுவாங்கள். அந்ததாய்மார் தான் அந்த அம்மன்கோயில் வாசல்ல கிடந்து சாப்பாடும் இல்லாம கதறுங்கள். அவங்கள மண்ணள்ளி திட்டுங்கள். அது கூட அவங்கட ஆக்களின்ர காதில விழுந்துதெண்டால் அடியும் உதையும்தான். கொஞ்ச நாள்ள நானே இதெல்லாத்தையும் என்ர கண்ணால கண்டன் என்ர ஈரல் குலையெல்லாம் அதை நினைச்சால் இப்பயும் நடுங்குது. நானும்; இங்க இருக்கிறபோது மற்றாக்களப்போல ஆரும் இப்பிடிக் கதை சொன்னா பொய்யெண்டுதான் நினைப்பன், ஆனா கண்ணால பாத்தப்பிறகு நினைக்கிறன் இவன்ர ஆட்சி ஆண்டவனே வரவே கூடாது வந்தா விடுதலை கேட்ட மக்கள் ஆபிரிக்க அடிமையவிட கேவலமாதான் வாழவேணும்.செஞ்சோலை பிள்ளையளுக்கு குண்டு போட்ட கொடுமைய நினைச்சா நெஞ்சு பதறுது. ( சுற்றுமுற்றும் பார்த்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தொடர்கின்றார்) அவங்கட முகாம்கள் எல்லாமே சனத்தோட தொடர்பு பட்டுத்தான் இருக்கும். அம்மன் கோயில் தேர்முட்டி ஓலையால மூடிக்கட்டியிருக்கும் அதுக்குப்பக்கத்தில இவங்கட கரும்புலி முகாம் அதிலயும் இந்த தேர்முட்டி மாரி கட்டியிருக்கும். பள்ளிக்கூடத்துக்கு அருகில பெட்டையளின்ர பெரிய காம்ப் இருக்கு. கோப்பிறட்டிக்கு ஒரு சுவரோட இன்.னொரு முகாம். இப்பிடி எல்லாமே மக்களோட சேத்துதான் இருக்கு. செஞ்சோலையிலயும் ஒவ்வொருநாளும் பிள்ளையளுக்கு பயிற்சிதான் நடக்கும். வெளி ஆக்கள கூட்டிக்கொண்டு வாறபோது இதெல்லாத்தையும் நிப்பாட்டிபோடுவினம். அண்டைக்கும் அந்த பயிற்சி நடக்கிறபோது வேவு விமானம் குறுக்கால போச்சுது கொஞ்சநேரத்தில ரெண்டு கிபீர் வந்து அடிச்சுது. நான் பதறிக்கொண்டு ஓடிப்போய் மரத்தின்ர மறைப்புக்கு கீழ இருந்த பங்கருக்குள்ள போனன் வேற பக்கத்தில இருந்த ரெண்டுபேரும் அதுக்குள்ள ஓடிவந்து இருந்தினம் ஒரு பசுமாடும் அதில வந்து நிண்டுது. உண்மையா என்ர உச்சம்தலையில விழுந்தமாரித்தான் இருந்துது. பிறகு கிபீர் போனபிறகு கொஞ்ச பேர்தான் ஒடிப்போச்சினம் நானும் போனன். அதுக்கிடையில சில வாகனங்கள்ள பெடியள் வந்து இறங்கினாங்கள். ஆக்கள கிட்டபோக விடயில்ல. கொஞ்ச பிள்ளையள் செத்துப்போச்சுதுகள் கொஞ்சம் காயங்களோட கிடந்ததுகள். அந்தப்பிள்ளையள தூக்கி காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்கயில்ல. பிளீட்பண்ணித்தான் அதுகளெல்லாம் செத்ததுகள். நான் என்னோட கதைக்கற சனத்தோட கதைச்சன் ஏன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால் காப்பாத்தலாம் தானே எண்டு. அவயள் என்ன பேசாமல் இருக்கச்சொல்லி சத்தம் போட்டினம். எனக்கு ஓரளவுக்கு இப்ப விளங்கீற்ருது. பிறகு புத்தகங்கள கொணந்து செத்த பிள்ளையளுக்கு பக்கத்தில போட்டுட்டு படமெல்லாம் எடுத்திச்சினம். அந்தக்கொடுமைய கண்ணால பாத்த பாவியா நான் இருக்கிறன். என்ர நெஞ்செல்லாம் படபடக்குது. ( நிறுத்திவிட்டார் நான் அதுபற்றி மேலும் சில கேள்விகள் கேட்கிறேன்) அது அரசாங்கம் சில ஆக்களட்ட ஏதோ ஒரு சாமான் குடுத்திருக்காம் ஒரு இடத்தில இருந்து அதை அமத்தினா ஆமிக்காரனுக்கு இடம் தெரியுமாம். இல்ல நான் காணயில்ல. ஆனா ஒரு கிழவன்தான் அத அமத்தி காட்டிக்குடுத்ததெண்டு அவற்ர மனிசிதான் சொல்லிக் குடுத்து மற்ரநாள் அந்தாள வந்து அடிச்சு இழுத்தெண்டு போனவங்களாம். இல்ல அத நான் காணயில்ல சொன்னவயள். ( இந்த சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு தூதுவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வீடியோ காட்டியதாக செய்திவந்தது அது என்ன வீடியோ என்பது மறைக்கப்பட்டது. இவர் சொன்னதில் இருந்து முதலில் வந்த விமானம் வீடியோ எடுத்த பின்தான் கிபீர் குண்டு போட்டுள்ளது. புலிகள் விளம்பரத்திற்காக அந்த பிள்ளைகளை இறக்கவிட்டு படமெடுத்து வியாபாரம் செய்துள்ளார்கள் என்பது கணிக்கப்படுகின்றது) அதால சனமெல்லாம் சரியான வெறுப்பும் ஆத்திரத்தோடயும்தான் இருக்குதுகள். புpடிச்செண்டு போற பிள்ளையளுக்கு சப்பாத்து கூட குடுக்கிறதில்ல வெறும் றபர் செருப்போட இல்லையெண்டால் வெறும் காலோடதான் சண்டைக்கு அனுப்புறவங்கள்.அங்க ஒரு ரீச்சர் இருக்கிறா அவாக்கு நாலு பிள்ளையள். மூத்தது பெடியன் ரெண்டாவதும் மூண்டாவதும் பெட்டையள் கடைசி பெடியன் எட்டுவயசு. எனக்கு நல்ல உதவி. ஒரு நாள் பெடியன வரச்சொல்லி சொல்லிவிட பெடியன் போக விருப்பமில்லாம ஒளிச்சு திரிஞ்சான் ரெண்டாம் நாள் இரவு சுத்திவளைச்சு வீட்டுக்க புலியள் பாஞ்சாங்கள் அப்பயும் அந்தப்பிள்ள ஒடி ஒளிச்சிட்டான் அவங்கள் பெட்டைய பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். அது சரியான கெட்டிக்காறப் பிள்ளை தான் படிச்சு டொக்டரா வருவன் அம்மா எண்டுசொல்லும். தமயன் பிறகு தான்போய் சறண்ட பண்ணிக்கொண்டு தங்கச்சிய எடுத்து விட்டவன். மூண்டு கிழமையில மன்னார் சண்டையில செத்துப்போனதா வந்து சொன்னாங்கள்.அந்த தாய் கதறின கதறல் இப்பயும் என்ர காதுக்குள்ள கேட்டுக்கொண்டே இருக்குது. அந்த கடசி குழந்தப்பிள்ளை தாயட்டக் கேக்கும் “அம்மா அக்காவ வந்து கொண்டுபோனாங்களெண்டா நானாம்மா போகவேணும்” எண்டு. எனக்கே அழுகவந்து நெஞ்செல்லாம் கனக்குது அந்த தாய்க்கு எப்பிடி இருக்குமெண்டு நினச்சுப்பாருங்க. ( சொல்லும்போது சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்துக்கொள்கிறார்).இப்படி பல விடயங்களை கூறினார் கடைசியாக மகனைப்பற்றி கூறும்போது இந்த நாட்டில் படித்த பிள்ளைகள் திருப்பி கதைக்குங்கள்தானே இப்படியான அனியாயங்கள் செய்வதற்கு இவன் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் பல முரண்பாடுகள் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து போனகாரணத்தால் இவரை கொல்லுவதற்கோ அல்லது கடுமையாக தண்டிப்பதற்கோ சற்று தயங்கினார்கள் சிலவேளைகளில் வெளிநாட்டு அரசுகளுக்கு மறுமொழி சொல்ல வேண்டி ஏற்பட்டு விடும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம் மகன் இவற்றைப் பார்த்த காரணத்தால் சாப்பிட மனமின்றி சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஏன்னுடைய தொடற்சியான அழுத்தமும் மகனின் போக்காலும் மகனை விடுவதாக கூறி கடைசியாக ஆறு மாத வன்னி வாழ்கையின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நானும் எனது மகனும் இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம். நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னையும் என்ர மகனையும் காப்பாற்றி உள்ளது. அங்க பிரபாகரனின் இந்த கொடிய வதைகளில் இருந்து அந்த மக்கள் எப்படித்தான் வெளியேறப்போகின்றார்களோ தெரியாது. தமிழீழத்திற்காக உதவி செய்தவர்கள் நாங்கள் ஆனால் இப்போது நான் நினைப்பதெல்லாம் தமிழீழம் கிடைக்கவே கூடாது அதுவும் புலிகளின் அடக்குமுறையில் அதுஇருக்கவே கூடாது.(நீண்ட பெருமூச்சோடு கூறி முடித்தார்) அவர் பல விடங்கள் கூறியிருந்தார் அவற்றையெல்லாம் பார்க்கின்ற போது நாம் கற்காலத்துக்கு சென்றுவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகின்றது..ஆபிரிக்க அடிமைகளை விட கேவலமான அடிமைகளாக வன்னி மக்களின்; வாழ்வு இருக்கின்றது. இதிலிருந்து மக்கள் வெளியேற முடியுமா?

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்..........

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்.......... வசிட்டர்.
வன்னியில் சிறுபகுதிக்குள் மாட்டுப்பட்டிருக்கும் மக்களின் நிலை சங்கடமான நிலையாக உள்ள இந்த வேளையில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் அங்கலாய்த்தக்கொண்டுள்ளார்கள். இளைஞர்கள் உண்ணாவிரதம் அறப்போராட்டம் என்று உண்மையான மக்கள் கரிசனையோடு செயற்படுகின்றனர் இதைப்பார்க்கின்ற போது ஆயுதப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தங்களை இணைத்தக்கொண்டு தலைவர்கள் கூறியவற்றை வேத வாக்காக எடுத்து செயற்பட்ட இளைஞர்களின் ஞாபகம்தான் ஏற்படுகின்றது. அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் வாஞ்சையுடனுமே செயற்பட்டார்கள் ஆனால் சரியான சிந்தனையை பெற்றுக்கொள்ள தவறிவிட்டார்கள் தலைவர்களும் அவர்களை தங்கள் சுய நலத்திற்காக பாவித்தார்கள் முடிவு மக்கள் நேயத்தோடு மக்களுக்காக தங்கள் கல்வியை எதிர்கால வாழ்வை இழந்த அந்த இளைஞர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். எந்த சமூகத்திற்காக எல்லாவற்றையும் இழக்கத்தயாரானோர்களோ அதே சமூகம்தான் அந்த முத்திரையை குத்தி மகிழ்ந்தது. சமூகத்தில் வெறுப்போடு பார்கப்பட்டார்கள். அந்த நிலமை இன்று உலகெங்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. நல்ல தலைமை இல்லாமல் சுயநலத்திற்காக அவர்களை பயன்படுத்ப்பார்க்கும் தலைவர்களின் தவறான வழிநடத்தல் அந்த நல்ல இதயம் கொண்டவர்களுக்கு தாய்நாட்டு மக்களுக்கான போராட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்திவி;டவிடக்கூடாது என்பது என் முதற் கவலையாகும்.
இவர்கள் போராட்டத்தின்போது முன்வைக்கும் கோசம் “யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு உலக நாடே இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் என்பதே”. வன்னியில் அடைபட்டுக்கிடந்து உயிரிழக்கும் அப்பாவிப் பொதுமக்களை இதன்மூலம் காப்பாற்றலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு உள்ளது அதனால்தான் இந்த போராட்டங்களில் குதித்துள்ளார்கள். ஆனால் இதையே வெளிநாட்டில் தலைமை கொடுப்போர் எந்த விதமான அரசியல் அறிவோ அல்லது போராட்ட இயக்கங்களில் சேர்ந்திருந்து அதனால் கிடைத்த அனுபவமோ இல்லாத வெறும் புகழுக்காக அல்லது சிங்களவனுக்கு அடிபோட்டால் ஈழம் கிடைத்துவிடும் என்று உண்மையாகவே நம்பிக்கொண்டிருக்கும் உயர்ந்த சிந்தனை அறிவு அற்றவர்களால் புலிகளால் வைக்கப்படும் ஏமாற்றுக்கோசங்கள் எடுத்துச் செல்ப்பட்டு திணிக்கப்படுகின்றது.புலிகளால் கொடுக்கப்பட்ட சிந்தனைதான் நிரந்தர யுத்தநிறுத்தம். நிரந்தர யுத்தநிறுத்தம் ஏன்? அழிவின் விழிம்பில் இருக்கும் புலிகள் தப்பிப் பிழைக்கவேண்டும் பின் வழமைபோல் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு மீண்டும் ஒரு சில தாக்குதல்கள், அதனால் பெறப்படும் வெளிநாட்டு பணம் அதை வைத்துக்கொண்டு மக்களை ஆளுதல் (அடக்கி)..இப்படிக்கேட்பதன்மூலம் போராட்டம் செய்வோர் தாங்கள் கேட்பதை வெளிநாடுகள் செய்யுமா என்பதை சிந்தித்து பார்த்தால் இல்லை என்பதுதான் விடையாகும். காரணம் உலகநாடுகள் எல்லாமே புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளது. நாம் விரும்பாவிட்டாலும் உண்மையும் அதுதான். ஆகவே இந்த வேண்டுகோளை எந்த நாடுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவே உண்மையில் மூன்று லட்சம் மக்களை காப்பாற்றும் எண்ணம் இருந்தால். முன்வைக்கப்பட வேண்டிய கோசம் உலக நாடுகளே எம்மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற கேள்வி மட்டுமே. மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகள் நிட்சயமாக சிந்திக்கும். மக்களை பாதுகாப்பதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும். ஆயுத தாரிகள் விலகுங்கள் மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பியதை செய்யட்டும் என்று கேட்கின்ற நிலை வரும். அப்படியான நிலைமை ஏற்பட்டால் மக்கள் எவரின் அழுத்தமும் இல்லாமல் தாங்கள் விரும்பியதை செய்வார்கள். புலிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையையோ, அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையையோ யாரும் சிரமப்பட்டு எடுக்கவேண்டிய தேவை கிடையாது. மக்கள் தாங்களே எடுப்பார்கள் அவர்கள் வாய்களும் கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டால் போதும். மக்களுக்காக குரல் கொடுப்போர் செய்வார்களா.சிலர் கேட்கின்றார்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமை வேண்டும்தானே என்று. இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு தலமை தாங்கியவர்கள் தொடர்ந்து செய்தது என்ன? இனத்துவேசம், இனவெறி, நாட்டுமக்களை தொடரந்;து தமக்கு வாக்களிக்க பண்ணி சொகுசு வாழ்க்கை, உண்ணாவிரதம், பகிஸ்கரிப்பு, கடையடைப்பு, பல்கலைக்கழக பகிஸ்கரிப்பு, ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் எல்லாவற்றையும் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்டு மீண்டும் தலமை தாங்குவதற்கு நாடடுக்கு வருதல் அடிமைகொள்ளல்., கடைசியாக நாலில் மூன்று பங்கு தமிழர்களை நாட்டில் இருந்து புலம்பெயரச்செய்த பெருமை, இதற்கொரு தலமை தேவைதானா. மக்கள் இப்போது நன்றாகவே நாட்டைப் படித்துவிட்டார்கள் அவர்களை அங்கே சுதந்திரமாக விடுங்கள் அது மட்டும் தான் தேவையானது. இன்னும் சிலர் கேட்கிறார்கள் அப்படி மக்கள் வெளியேறிவிட்டால் புலிகள் முற்று முழுதாக அழிந்துவிடுவார்கள். பின் மீண்டும் கட்டியெழுப்புவது என்பது இலகுவானதா என்று. இலகுவானது அல்ல ஒரு சரியான மக்கள் விடுதலைக்கான அமைப்பு உருவாவது என்பது இலகுவானதல்ல. ஆனால் ஈழ விடுதலை அமைப்பு பயங்கரவாத செயல்களை செய்ததன் மூலம் விடுதலை அமைப்பு என்ற பெயரை இழந்து உலகெங்கும் பயங்கரவாத அமைப்பென்ற பெயரோடு நிற்பது தேனைக்குரிய உண்மை. இதன் காரணம் அரசியல் அறிவில்லாத வெறும் ஆயதத்தை நம்பிய தலைமை என்பதால்தான் என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் அரசியல் அறிவுள்ள சில தலைவர்களால் மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருந்த சுய நல அரசியல் வாதிகளான கூட்டணியினரை அப்புறப்படுத்தி மக்களை விழ்ப்படைய செய்தது. ஆனால் இன்று அதே சுய நல அரசியல் வாதிகளை தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரோடு தலைவர்கள் ஆக்கி பாராழுமன்றம் அனுப்பிய அரசியல் அறிவற்ற தலைமை தான் என்பது துர்அதிஸ்ட வசமானது. (பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள் ). இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது தமிழ் கூட்டமைப்பினர் சிலர் புலித்தலைமைக்கு எதிராக பல்டி அடிக்க தொடங்கியுள்ள செய்திகள் வருகின்றது. உண்மையில் இது நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப் படவேண்டும்.ஆக மக்களை காப்பாற்றும் நோக்குள்ளவர்களே உங்களுடைய உண்மையான போராட்டத்தில் அரசியல் அறிவற்ர சுயநலமிகளின் தலையீட்டை அனுமதிக்காமல் சிந்தித்து செயல்ப் படுங்கள் இல்லையேல் நாளை நீங்கள் துரோகிகள் என்று தூற்றப்படுவீர்கள். சிந்தித்து செய்படும்போது தூற்றப்பட்டால் பெருமைப்படலாம். ஏனென்றால் வெளிநாட்டில் வாழும் அரசியல் அறிவற்ற தலைவர்களுக்கு இன்றைய துரோகிகள் நாளைய தியாகிகள். (வரலாற்றில் பலர் எம் கண்முன் இருக்கின்றார்கள்). இவர்கள் பட்டம் எவரையும் எதுவும் செய்துவிடாது. நியாயத்துக்கும் மனிதாபிமானத்திற்கும் கட்டுப் படுவோம்.மீண்டும் அடுத்த கட்டுரையோடு வருகின்றேன்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

புலிகளின் அழிவும் இனி செய்யப்படவேண்டியவையும்

வசிட்டர்
உலகின் இரண்டாவது பெரிய இரானுவத்தை வெற்றி கொண்டதாக இறுமாந்திருந்த புலிகள் இன்று உலகில் மிகச்சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போகின்றது. புலிகள் தோற்றுப்போவது தற்போதைய நிலையில் அவசியமான ஒன்றுதான் என்பதை புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களை தவிர நாட்டில் புலியின் அராஜகத்திற்குள் சிக்கித் தவித்த அனைத்து மக்களும் எதிர்பார்த்தார்கள்.இந்திய ராணுவத்தை வெற்றிகொண்டதன் பின்புலத்தை பிரபாகரன் என்றுமே திரும்பிப்பார்த்ததில்லை. அந்த வெற்றியின் முதற்காரணம் மக்கள்தான். புலிகள் தங்கள் வழமையான இராணுவ தந்திரோபாயங்களை ( மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ராணுவத்தின் மேல் குண்டெறிந்து வி;ட்டு ஓடுவதுஇ துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு ஓடுவது.) பாவித்தல் மூலம் ராணுவத்தை ஆத்திரமூட்டி அவர்கள் மக்கள் மேல் தங்கள் அராஜகங்களை செய்யும் போது அப்பாவி மக்களும் இவர்களுக்கு புலிகள்தான் சரி என்ற முடிவுக்கு வந்து புலிகளை தங்கள் ஆபத் பாந்தவர்களாக நினைக்கத் தொடங்கி விடுவதும் அதனால் புலிகளுக்கு ஆட்கள் சேருவது முதலஇ; உதவிகள் இ உணவுஇ மறைவிடம் என்பனபோன்றவற்றையும் தாராளமாக செய்தார்கள். ஆனால் தற்போது உள்நாட்டில் புலம் பெயர்ந்;த யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களில் பெரும் பாலானவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் வவுனியாவிற்கும் சென்றுவிட. ஒரு குறைந்த எண்ணிக்கையான யாழ்ப்பாணத்தவரும் மிகுதியாக வன்னி மக்களுமே புலிகளிடம் மாட்டுப்பட்டிருந்தார்கள். இவர்கள் வெளிஉலகமே தெரியாத கிணத்துத் தவளைகளாகவே வாளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையாயிற்று. புலிகளின் வன்னிப் பிரதேசம் வெளிநாடு வாழ் உல்லாசப்பயணிகளான தமிழர்களை கவரும் வகையில் கோட்டல்களும் பளிங்கு கற்களால் ஆன கல்லறைகளும் பூப்பாத்திகளும் அமைக்கப்பட்டன. உல்லாசிகளும் இதை மட்டுமே பார்த்துவிட்டு வந்து ஆகா வெளிநாடுமாரி புலி வைத்துள்ளது என்ற வண்ணம் டொலர்களில் கொஞ்சம் பிச்சையும் போட்டு வர்தார்கள். ஒருவராவது ஏ 9 வீதியில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீற்ரர் உள்சென்று பார்க்க நினைக்கவும் இல்லை புலிகளால் பார்க்க விடப்படவுமில்லை. பார்த்திருந்தால் வாய்திறக்க உரிமையின்றி இ தொழில் வசதி எதுவுமின்றி தங்கள் வாழ்வாதாரத்திற்கு புலிகளிடம் பிச்சை எடுத்து உண்ணும் நிலை என்பது விளங்கியிருக்கும். அரச உத்தியோகத்தவர்கள் கூட இலங்கை அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு ( அதிலும் புலிக்கு வரி கொடுத்து விட்டு) புலியின் கட்டளைக்கு சேவை செய்தார்கள். பிள்ளைகள் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள் இவை எல்லாம் மக்கள் மனங்களில் கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது அவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் நிலைதான் உள்ளது இது நியதி. இதுதான் இன்று ராணுவம் வெற்றி கொண்ட முதற்காரணம்.இரண்டாவது புலிகளில் பல திறமையான இடைநிலை தலைவர்கள் இருந்தார்கள். ( அவர்களும் அரசியல் மயப்படாத வெறும் இயந்திர திறமை மட்டும் உள்ளவர்கள்தான்.) குறிப்பாக கருணாஇ மாத்தையாஇ அவர்களோடு சேர்தவர்கள். இவர்களின் திட்டமிடல் போராட்ட வழிமுறைகளால் பெற்ற வெற்றிகளையெல்லாம் பிரபாகரன் தன்னுடைய நேரடித் திட்டமிடலும் நெறியாள்கையும் என்று வெளிநாட்டு தமிழர்களுக்கு சொல்லி. தட்டிக் .கொடுக்கப்பட வேண்டிய சிறந்த போராளிகளை துரத்திக்கலைத்து விட்டு அல்லது கொன்றுவிட்டு அடுத்தநகர்வை திட்டமிட முடியாமல் போனது. ( பிரபாகரனின் திட்டமிடலை பொலிஸ் கான்ஸ்டபிளை சுட போன போதே நாங்கள் அறிந்தவர்கள். அன்று பாலா என்ற போராளி இல்லையென்றால் அன்றே அவருக்கு பாலூற்றப்பட்டடிருக்கும் ) இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புவது ஆனையிறவு முகாம் தாக்குதல். பிரபாகரனின் திட்டமிடலில் தொடங்கி ஜநூறு போராளிகள் மாட்டுப் பட்டு நின்றபோது எல்லாம் முடிந்ததென தலைவர் கைவிரிக்க கருணா தலைமையில் கிழக்கு வடக்குப் போராளிகள் இணைந்து கருணாவின் திட்டமிடலில் போராளிகளை மீட்டது மட்டுமல்லாது வெற்றியும் கொண்டது. அதன் பின்பும் அந்த வெற்றியையும் தானே சூட்டிக்கொண்டது. இது உள்ளக போராளிகளுக்கு விழுந்த மாபெரும் அடியாகும். எந்த மடையன்தான் தன்னுடைய திறமையால் மற்றவன் பேர் பெற்றுக்கொள்ள அனுமதிப்பான். இன்று அதன் விழைவு இலங்கை ராணுவம் பெற்ற வெற்றி.இப்போ மக்களின் கேள்வியெல்லாம் பிரபாகரன் பிடிபடுவானா தப்பி ஓடிவிடுவானா அல்லது சயனைட் அடிச்சு மாவீரனாவானா என்பதுதான். பிரபாகரன் என்ன ஆவான் என்பதைவிட மக்கள் விடுதலை என்பது மரணித்து விட்டது என்பது தான் மன வேதனையானது. முற்போக்கு சிந்னையுடன் வர்க்கவிடுதலைக்காக ஆயுதமேந்தியவர்கள் அளிக்கப்பட்டு இன விடுதலைஎன்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் வேள்வித் தீயில் போட்டு தன் சுயநலத்திற்காக ஒரு நாட்டின் ஒரு தேசத்தின் எதிர்பார்ப்பையே தீயில் கருக்கிய ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கு எந்தத்தண்டனைதான் பொருந்தும். எம் கேள்விகள் அடுத்து என்ன செய்யப்படல் வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். அந்த விவாதத்தின் வழியாக விடை காணப்படல் வேண்டும். எனது சிந்தனையின் வெளிப்பாடு அடுத்த கட்டுரையில் முன்வைக்கப்படும்